ஐ.தே.க.யை காப்பாற்ற சந்திரிக்கா, முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
ஐக்கிய தேசிய கட்சியை காப்பாற்றுவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சந்திரிகா குமாரதுங்கவுக்கு முன்னர் இருந்த தலைவர்கள் உண்மையில் அந்த கட்சியை சிறப்பாக வழிநடத்தினர். ஆனார் இவர் அந்த கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியை காப்பாற்ற முயற்சித்து சுதந்திரக் கட்சியை பலமிழக்கச் செய்துவிட்டார்.
எனினும் மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவம் ஏற்ற பின்னர் அந்த கட்சி மீண்டும் பலமடைந்தது. பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது சுதந்திர கட்சி எடுத்த தவறான முடிவின் காரணமாக மீண்டும் பிளவடைந்தது. எனினும் எடுத்த முடிவு தவறு என்று உணர்ந்ததன் பின்னர் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதாக சு.க எடுத்த முடிவும், தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படப் போவதாக எடுத்துள்ள முடிவும் சிறந்த முடிவாகும். இதன் மூலம் சு.க மீண்டும் பலமான கட்சியாக கட்டியெழுப்பப்படும்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இதனை தடுப்பதற்கே முயற்சிக்கின்றார் என்றே தோன்றுகிறது.
எவ்வாறிருப்பினும் அவரால் இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் சு.க எடுத்த முடிவில் உறுதியாக இருக்கும் என்று நம்புகின்றோம். எனவே அவர் கூறும் விடயங்களை நாம் ஒரு பொறுட்டாகக் கருதுவதில்லை என்றும் அவர் கூறினார்.
Post a Comment