வெறுக்கத்தக்க பேச்சுக்களையும், போலியான செய்திகளையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்
போலியான செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுக்கள் என்பவற்றை தவிர்த்துக் கொள்வதன் மூலம் ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்த முடியும் எனத் தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அனைத்து வேட்பாளர்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டால் மாத்திரமே சுதந்திரமான தேர்தலை நடத்த முடியும். அந்த உரிமையையும் சுதந்திரத்தையும் நாம் அனைவருக்கும் வழங்கியிருக்கின்றோம். தமது கருத்துக்களை கூறுவதற்கு இருக்கின்ற உரிமை ஏனையவர்கள் அவர்களது கருத்துக்களை கூறுவதற்கும் இருக்கிறது என்பதை அனைத்து வேட்பாளர்களிடமும் தெரிவித்திருக்கின்றோம்.
ஏனையவர்களுக்கு கவலையை ஏற்படுத்தாத வகையில் தேர்தல் இடம்பெற வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஏனையவர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும். தனக்கு இருக்கும் உரிமை ஏனைய வேட்பாளர்களுக்கும் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
Post a Comment