Header Ads



பிளவுபடும் கட்டத்தில் சு.க. நெருக்கடியில் மைத்திரி - முக்கியஸ்தர்களை இன்று அவசரமாக சந்திக்கிறார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையில் இன்று பிற்பகல் முக்கிய சந்திப்பில் ஜனாதிபதி ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதி இல்லத்தில் இன்று காலை 8 மணியளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஜனாதிபதியுடன் தனியான சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு சார்பாக குமார் வெல்கம கலந்துகொண்டு ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக போட்டியிடவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்ததோடு, ஜனாதிபதி சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றுமொரு கட்சிக்கு ஆதரவு வழங்குவதோ அல்லது மற்றுமொரு வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதோ கட்சியின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக அமையாது எனவும் குமார வெல்கம ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி வேறொரு கட்சிக்கு ஆதரவு வழங்க முற்பட்டாலோ அல்லது வேறொரு வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முற்பட்டாலோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக குமார வெல்கமவை களமிறக்கும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவ்வமைப்பு சார்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால் இன்று பிற்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை ஜனாதிபதி அவசரமாக சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.