இனவாதம் பேசிய அனைவரும், இன்று ஒரு அணியில் இருக்கின்றனர் - அஸாத் சாலி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஷவிடம் சரணடைந்தன் மூலம் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்திருக்கின்றது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் நடுநிலை வகிப்பதாக அறிவித்திருக்கின்றார்.
ஏனெனில் ஊழல் மோசடிக்காரர்களுக்கு தான் ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை என தெரிவித்துவரும் ஜனாதிபதிக்கு கோத்தபாய ராஜபக் ஷக்கு ஆதரவளிக்க முடியாது. ஆனால் சஜித் பிரேமதாசவுக்கு அவரின் ஆதரவு இருப்பது அவர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இந்த அரசாங்கத்திலும் கடந்த அரசாங்கத்திலும் அமைச்சர் சஜித் பிரேமதாசவைப்போல் அர்ப்பணிப்புடன் மற்றும் நேர்மையாக சேவை செய்யக்கூடிய அரசியல்வாதிகள் யாரும் இல்லை என பகிரங்கமாக தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறானவர்கள் இல்லாத பொதுஜன பெரமுனவுக்கு இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவளிக்க தீர்மானித்திருக்கின்றது. இவர்களின் இந்த தீர்மானம் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இருந்துவந்த வாக்குவங்கியும் இல்லாமல்போயுள்ளது. கட்சி ஆதரவாளர்களும் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கோத்தபாய ராஜபக் ஷவின் தேர்தல் மேடைகளில் ஏறும்போது அவர்களுக்கு எதிராக பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் கூச்சலிடுகின்றனர். அதனால் அவர்களின் மேடைகளில் ஏறுவதற்கு முடியாத நிலை சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இனவாதம் அடிப்படைவாதம் பேசிய அனைவரும் இன்று ஒரு அணியில் இருக்கின்றனர். ரத்ன தேரர், ஹிஸ்புல்லாஹ், சிலோன் தெளஹீத் ஜமாத்தைச்சேர்ந்த அப்துர் ராஸிக் ஆகியோர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு ஆதரவளித்து வருகின்றனர். ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவு கோத்தபாய ராஜபக் ஷவுக்குத்தான் என்பதை எஸ்.பி. திஸாநாயக்க பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றார்.
அதேநேரம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அப்பதுல் ராஸிக் எமக்கு ஆதரவளிக்கவில்லை என கோத்தபாய ராஜபக் ஷவின் ஊடக பேச்சாளர் டலஸ் அழகப்பெரும அதனை மறுத்திருக்கின்றார். என்றாலும் இவர்கள் அனைவரும் ஒரு அணியில் இருப்பதன் மூலம் கடந்த காலங்களில் நாட்டில் இனவாத, அடிப்படைவாத பிரச்சினையை ஏற்படுத்தி வந்தவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ளலாம் என்றார்.
(எம்.ஆர்.எம்.வஸீம்)
Champika Ranawake is in your camp. How do you explain that?
ReplyDelete