யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், நாளை வியாழக்கிழமை திறக்கப்படுகிறது
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு விமான சேவை நாளை (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய விமானம் பரீட்சார்த்தமாக தரையிறங்கியுள்ளது.
இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவுடன் ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் செவ்வாய்க்கிழமை தரையிறங்கியுள்ளது.
விமான ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து இந்திய அதிகாரிகள் ஆராயவுள்ளனர்.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் பணிகள் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் தேதியன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பலாலி விமான நிலையம் மூன்று கட்டங்களாக விரிவாக்கப்படுகிறது . முதற்கட்ட பணிகளுக்காக சுமார் 2 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
விமானநிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விமான நிலையத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வரும் 17 ஆம் தேதியன்று திறந்து வைக்கவுள்ளனர்.
விமான நடவடிக்கை செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் பிரதான ஓடுதளத்தின் முதலாவது 950 மீட்டர் மார்க்கம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் குறித்த பிரதான ஓடுதளத்தின் 1.5 கிலோமீட்டர் மார்க்கம் மேலதிகமாக நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனை பூர்த்தி செய்த பின்னர் பலாலி விமான நிலையத்தில் இருந்து 1800 சதுர கிலோமீட்டர் வரையான ஆகாய மார்க்கத்தில் விமானங்கள் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.
திட்டத்தின் இறுதிக்கட்டத்தின் போது பிரதான விமான ஓடுதளத்தின் 2.3 கிலோமீட்டர் மார்க்கம் முற்றாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் அந்த கட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் AL- 320 மற்றும் AL- 321 ரக விமானங்கள் பலாலி விமான நிலையத்தில் இருந்து பிராந்திய விமான நிலையங்களுக்கு பயணிக்கவுள்ளன.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்தின் குறியீட்டு இலக்கம் (ICAO CODE) என்பது VCCJ ஆகும். சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் (IATA) என்பது JAF ஆகும்.
இந்த பெயருக்கு அமைவாக மட்டக்களப்பு விமான நிலையம் மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையமாகவும், சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் VCCB ஆவதுடன், சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் BTC என்பதாகும்.
கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் YCCC ஆவதுடன், சர்வதேச விமான சேவை சங்கத்தின் குறியீட்டு இலக்கம் RML ஆகும்.
இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் தற்பொழுது உள்ள சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
இவை கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவையே இவையாகும்.
Good
ReplyDeleteEnnada oruththanuam kanam 🇵🇰 thiranthal vanthu eruppanukal
ReplyDelete