கோத்தாபயவுக்கு இன்னும், நெருக்கடிகள் வரலாம் - சமல் அனுப்பிய முக்கிய கடிதம்
பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முக்கிய கடிதமொன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில் கட்சி சார்பாக நியமிக்கப்பட்ட வேட்பாளர் ஒருவரின் பெயரில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடைய பெயரை மாற்றி அதற்காக பிறிதொருவரின் பெயரை உள்ளீர்க்க முடியுமா என்பது பற்றி விளக்கமளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கடிதத்தினை பெற்றுக்கொண்ட ஆணைக்குழுவானது, கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் உரிய பதிலை கலந்துரையாடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நேற்று முன்தினம் 6 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நண்பகலில் அறிவித்ததையடுத்தே முன்னேற்பாடாக சமல் ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்தார். பின்னர் நீதிமன்றம் அவ்வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சமல் முன்னேற்பாடாகவே கட்டுப்பணத்தினை செலுத்தியதாகவும் பின்னர் மீளப்பெறுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அடுத்துவரும் தினங்களில் கோத்தாபயவுக்கு நெருக்கடிகள் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வாபஸ் அறிவிப்பினை உடனடியாக விடுக்க வேண்டாம் என்று சமல் ராஜபக்ஷவுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
(ஆர்.ராம்)
Post a Comment