Header Ads



நல்ல ஒரு ஜனாதிபதி, எமக்கு கிடைக்க வேண்டும் - மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ

எமது நாட்டு மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய ஒரு உகந்த நல்ல ஜனாதிபதி எமக்கு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் ஆசி வேண்டுகிறோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் 70 ஆண்டுகள் அரசியல் பயணமும், சமகால அரசியலும்' எனும் கருப்பொருளில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி தேர்தல் நமக்கு அருகில் வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நாங்கள் எமது நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி நினைக்கின்ற போது எம்மிடம் என்ன வகையில் சிந்தனைகள் இருக்க வேண்டும், எமது மக்கள் மத்தியில் என்ன விதமான சிந்தனையில் இருந்து அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதனை பார்க்கின்றோம்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெற இருப்பதினால் ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்து தமது சிந்தனைகளினூடாக செயல்பட வேண்டும். நாங்கள் தமிழ் மக்கள் என்ற வகையில் எமக்கு ஒரு பொறுப்பு உள்ளது.

எமது மக்களுக்காக எமக்கு ஒரு பொறுப்புள்ளது. சிங்களவர்கள் எங்கே இருக்கின்றார்கள்? தமிழ் மக்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் சரியாக புரிந்து கொண்டு நாம் சரியான முறையில் சிந்தனையில் வைத்து வாக்களிக்க வேண்டும்.

எமக்கு இருக்கக் கூடிய ஒரு உரிமை வாக்குரிமை. எனவே அந்த உரிமையை நாம் பயன்படுத்த வேண்டும். ஆனால் அதனை நாம் எப்படி பயன்படுத்துவது? சரியான முறையில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. ஆம். நல்லதோர் தலைவன் வர இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.