ஜனாதிபதியானால் சம்பளம் பெறமாட்டேன் - சஜித்
ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் சம்பளத்தை கஷ்டப்படும் மக்களுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சரும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று -02- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் மொத்த சனத்தொகையில் 45வீதமானவர்கள் தொல்லாயிரம் ரூபாவே நாளாந்த வருமானமாக பெற்று வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இந்த வருமானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில் குடிசன மதிப்பீட்டு திணைக்களத்தின் தகவலின் பிரகாரம் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஆகாரம் மற்றும் ஏனைய தேவைகளுக்காக மாத வருமானமாக 50 ஆயிரத்தி 500 ரூபா தேவைப்படுகின்றதாக தெரிவிக்கின்றது.
இவ்வாறானதொரு நிலை இருக்கும்போது நாட்டில் வாழும் மக்களின் 45 வீதமானவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் இல்லாமல்போயுள்ளது.
அத்துடன் நாட்டின் தேசிய வருமானத்தில் 55வீதத்தை 20வீதமான செல்வந்தர்களே அனுபவிக்கின்றனர். 45வீதமான வரிய மக்கள் 5 வீதத்தையே அனுபவிக்கின்றனர்.
இந்த நிலைதொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய முரண்பாடு இருக்கின்றது. மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதியான பின்னர் இந்த வித்தியாசத்தை ஒர் அளவுக்கு கட்டுப்படுத்தி, அனைத்து மக்களும் ஆகாரம் மற்றும் ஏனைய வசதி வாய்ப்புக்களுடன் வாழ்வதற்கான நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறினார்.
(எம்.ஆர்.எம்.வஸீம்)
Post a Comment