இதுவரை இணக்கப்பாடு இல்லை - 5 ஆம் திகதிக்கு முன் அறிவிக்குமாறு ஜனாதிபதி கடிதம் அனுப்பினார்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளுக்கிடையே நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எந்தவித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை.
எனினும், எதிர்காலத்தில் தேர்தலில் முகங்கொடுக்கவுள்ள விதம் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் என்பன தொடர்பில் இரண்டு தரப்பினருக்கிடையே ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை அங்கத்துவப்படுத்தி அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, அதன் பொருளாளர் லசந்த அழகியவண்ண, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர ஆகியோர் பங்கேற்றிருந்தனர்
இதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சின்னம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் இறுதியான நிலைப்பாட்டை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும் இன்றைய தினம் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணி ஏற்படுத்தல் என்பன தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment