பேருவளை சு.க அமைப்பாளர் அம்ஜாத் உள்ளிட்ட 30 பேர் சஜித்துக்கு ஆதரவு
பேருவளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எம். அம்ஜாத் சுதந்திரக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர் சந்தன செனவிரத்ன ஆகியோர் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். கொழும்பிலுள்ள சஜித் பிரேமதாசவின் தேர்தல் அலுவலகத்தில்
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரைச் சந்தித்து தங்களது நிலைப்பாட்டை அறிவித்தனர். தங்களுடன் 30க்கு மேற்பட்ட சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களும் சஜித்துக்கு ஆதரவளிக்கவிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இங்கு நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது அம்ஜத் ஹாஜியார் கூறியதாவது,
சுதந்திரக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் தனித்துச் செயற்பட வேடுமென்றே நாம் வலியுறுத்தினோம். கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் மத்திய குழுக் கூட்டத்திலும் நாம் இதனை வலியுறுத்தினோம்.
எமது யோசனைகளை ஜனாதிபதி நிராகரித்து மொட்டுடன் சங்கமித்துவிட்டார். இதன் விளைவு கட்சியினதும், அமைப்பாளர்களதும், பாராளுமன்ற உறுப்பினர்களதும் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எம்மால் ஆதரவளிக்க முடியாது.
இதன் காரணமாகத்தான் நாம் சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொண்டு சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தோம் என்றார்.
எம்.ஏ.எம். நிலாம்
Post a Comment