ஐதேக துண்டு துண்டாகவிட்டது - SLFP யை தாரைவார்த்தால் அடக்கம் செய்ய நேரிடும்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து வாக்கு கேட்பதை தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வேறு வழியில்லை என கூட்டு எதிரணி சுட்டிக்காட்டியுள்ளது.
கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.
பிராந்திய ஊடகவியலாளருக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு போட்டியாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும் கூறினார்.
சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மொட்டு சின்னத்தில் போட்டியிட முடியாது என பொய் கூறிவருவதாக தெரிவித்த அவர், சிலர் சுதந்தரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாரை வார்க்க முற்படுவதாக கூறுகின்றனர். அவ்வாறு நடந்தால் சுதந்திர கட்சியை மயானத்தில் அடக்கம் செய்ய வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சி இப்போது சபாநாயகர் கருஜயசூரிய, சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேகா மற்றும் சம்பிக்க ரணவக்க போன்றோரில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட வேட்பாளர்களில் ஒருவரை பெயரிடுவதற்குள், ஐக்கிய தேசியக் கட்சி தற்போது துண்டு துண்டாகிவிட்டதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment