சொந்த தொகுதியில் கூட வெற்றிபெறாத சஜித், எப்படி முழு நாட்டிலும் வெற்றியைப் பெற முடியும்..? மகிந்த
வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தமது தரப்புக்கு சவாலாக இருக்கமாட்டார் என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.
“சஜித் பிரேமதாசவை வேட்பாளராக ஐதேக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எமக்கு சவாலே அல்ல. சஜித் போட்டியிட வேண்டும் என்பது தான் எனது கருத்தாக இருந்தது.
அம்பாந்தோட்டையில் தனது சொந்த தொகுதியான திஸ்ஸமகராமவில் கூட வெற்றியைப் பெற முடியாதவர் எவ்வாறு முழு நாட்டிலும் வெற்றியைப் பெற முடியும்?
அவருக்கு ஐதேக யானைச் சின்னத்தைக் கூட கொடுக்கவில்லை. சரத் பொன்சேகாவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிட்ட அன்னம் சின்னத்திலேயே அவர் போட்டியிடப் போகிறார். அவர்கள் ஐதேகவினர் அல்ல. எனவே அது சரியானது.
ஆனால் சஜித் ஐதேகவின் பிரதித் தலைவர். அவருக்கு யானைச் சின்னம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், பிரதமராக யார் நியமிக்கப்படுவார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்றும் அவர் கூறினார்.
Post a Comment