விடுதலை செய்யப்பட்டார் பாலித்த
பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த 6 பேரும், ஒரு இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று (16) அறிவித்துள்ளது.
பிரதி அமைச்சர் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் இன்று (16) மத்துகம நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது மத்துகம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி மத்துகம, ஜேபட் பிரதேசத்தில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள மயானத்தில் அடக்கம் செய்த சம்பவம் ஒன்று தொடர்பில் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19 ஆம் திகதி தெபுவன, ட்ரொயிட் தோட்டத்தை சேர்ந்த நபர் ஒருவரின் சடலத்தை அந்த தோட்டத்தில் அடக்கம் செய்ய கூடாது என தெரிவித்து தோட்ட உரிமையாளரால் தெபுவன பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய மத்துகம நீதவான் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்த நிலையில், பிரதி அமைச்சர் தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேர் குறித்த தடை உத்தரவையும் மீறி உயிரிழந்த நபரின் சடலத்தை குறித்த தோட்ட மயானத்தில் அடக்கம் செய்திருந்தனர்.
அதன்படி, பிரதி அமைச்சர் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் கடந்த 10 ஆம் திகதி மத்துகம நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்களை இன்றைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment