Header Ads



சஜித்தும், ரணிலும் சம்பந்தனுடன் சந்திப்பு - ஒளிவு மறைவில்லாது தீர்வை வெளிப்படுத்த வலியுறுத்து

 ஐக்கிய தேசிய கட்சியினால் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்பதை ஐக்கிய தேசிய கட்சி ஒளிவு மறைவில்லாது நாட்டு மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டும் என பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார். 

அத்துடன் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி முன்வைக்கும் தீர்வு என்ன என்பதை பொறுத்தே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எடுப்போம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டும்  தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை தமது தீர்மானம் என்னவென்பதை அறிவிக்காதுள்ள நிலையில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அழைப்பினை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்  மற்றும் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் ஆகியோர் இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்தனர். 

இதன்போதே சம்பந்தன் மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, ரவி கருணாநாயக ஆகியோரும் கலந்துகொண்டனர்.  

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வேறு எவரும் இன்று சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆகவே தமிழ் தேசிய கூட்டமைபின் உறுப்பினர்களிடம் பேசி அவர்களின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டையும் அறிந்த பின்னர் தான் ஒரு முடிவை கூருகின்றேன் என்ற காரணியை பிரதமரிடம் கூறி வருவதாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரிடமும் தெரிவித்துவிட்டே பிரதமரை சம்பந்தன் சந்தித்திருந்தார். 

No comments

Powered by Blogger.