Header Ads



ஜனாதிபதித் தேர்தலில், வெற்றிபெற முடியும் - இது ரணிலின் நம்பிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான எந்த அச்சமும் இல்லை எனவும் அதில் வெற்றி பெற முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று -19- மாலை நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவம் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க,

ஜனநாயகத்தை பாதுகாக்க நாங்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுப்போம். அன்று நாட்டை நாங்கள் பொறுபேற்ற போது, சுதந்திரமான சமூகத்தை எமக்கு ஏற்படுத்த முடியும் என எவரும் நினைக்கவில்லை.

தற்போது எந்த நிலைப்பாடுகளை தெரிவிக்க முடியும். அரசாங்கத்தில் எந்த இடத்திலும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். தற்போது ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் இருக்கின்றது. அரசியல் பணிகளை செய்யவும் சுதந்திரம் இருக்கின்றது. எவரும் வெள்ளை வான்களுக்கு அஞ்சுவதில்லை. வெள்ளை வான் யுகம் முடிந்து விட்டது.

நாடாளுமன்ற கூட்டங்களை நேரடியாக பார்க்க முடியும். எங்களை பற்றி தீர்மானிக்க முடியும். மேலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டால் செவிக்கொடுக்க தயார். இணக்கப்பாடு ஏற்பட்டால் அமுல்படுத்த தயார்.

எம்மை எப்படியெல்லாம் விமர்சிக்கின்றனர். நாங்கள் அவற்றை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை. தாக்க முயற்சிக்கவில்லை. எமக்கு எதிராக கூட்டணி அமைக்கின்றனர்.

ஜனநாயகத்தின் கீழ் அவற்றை செய்கின்றனர். நாங்கள் இவற்றை கண்டு அஞ்சவில்லை. சுயாதீன ஆணைக்குழு தேர்தலை நடத்துகிறது. நான் தவறு செய்தாலும் அது பற்றியும் கூறுவார்கள்.

எம்மால் முன்னோக்கி செல்ல முடியும். சுதந்திரமான ஜனாதிபதித் தேர்தலை நடத்த போகிறோம். அதனை எவரும் குறைக்கூற முடியாது போகும். துப்பாக்கிகளுடன் வர மாட்டோம்.

தாக்க மாட்டோம். நாங்கள் அவை எவற்றுக்கும் பயமில்லை. ஜனாதிபதித் தேர்தலை எம்மால் எதிர்கொள்ள முடியும். அதில் வெற்றி பெறவும் முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.