Header Ads



"கோத்தாபய சிறிலங்காவின் குடிமகன் அல்ல" என அறிவிக்குமாறு நீதிமன்றத்தில் மனு

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையின் செல்லுபடித்தன்மையை சவாலுக்குட்படுத்தும், ரிட் மனுவொன்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பான முழுமையான விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. எனினும், நொவம்பர் 16 அதிபர் தேர்தலில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் கோத்தாபய ராஜபக்சவுக்கு சிறிலங்கா குடியுரிமை எப்போதாவது சட்டபூர்வமாக வழங்கப்பட்டதா என்பது பற்றிய கேள்விகளை எழுப்பும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், கோத்தாபய ராஜபக்ச  ஒரு சிறிலங்கா குடிமகன் என்று கூறுவதைத் தடுக்கும் வகையில், இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறும், கோரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த மனுவை சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட, பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

கோத்தாபய ராஜபக்ச சிறிலங்காவின் குடிமகன் அல்ல என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என புரவெசி பலய அமைப்பின் அமைப்பாளர், காமினி வியாங்கொட தெரிவித்துள்ளார்

“எங்களை ஆள விரும்புவோர், சட்டத்தின் ஆட்சியை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதற்கு முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரியானவராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

மனுதாரர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றிடம், இடைக்கால நிவாரணம் கோருகின்றனர்.

No comments

Powered by Blogger.