இலங்கை ஜனாதிபதித் தேர்தல் அமெரிக்க - சீனா போட்டியாகவே அமையவிருக்கிறது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான போட்டியாக அமையப் போவதில்லை. மாறாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டியாகவே அமைவிருக்கிறது. நாம் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னரே அவ்விரு நாடுகளும் எமது தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. அவர்கள் தேர்லின் முடிவுக்கு அமைய நாட்டை அடிமைப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவரின் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். விஜேதாச ராஜபக்ஷ மேலும் கூறியதாவது ;
மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் சொத்து விபரங்களை வெளியிட வேண்டியது சட்ட ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அந்த விபரங்களை வழங்காமல் இருப்பது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நாட்டில் ஜனநாயக மற்றும் நல்லாட்சியை நிலைநாட்டுவதற்காக சிறிமாவோ பண்டார நாயக்கவே இந்த சட்டத்தை அமுல்படுத்தினார். இருப்பினும் இந்த சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வில்லை.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் தலதா அத்துகோரள இந்த சட்டத்தை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதன் போது அமைச்சரவையில் நானும் சில யோசனைகளை முன்வைத்திருந்தேன். அந்த யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்ததோடு அந்த சட்டம் திருத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி சகல மக்கள் பிரதிநிதிகளும் மற்றும் நிர்வாக சேவைப் பிரிவை சேர்ந்த முக்கிய அதிகாரிகளுக்கும் தொடர்புப்பட்ட வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டது. அதன் பின்னர் ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளன.
அதேபோன்று இந்த சட்டத்தை திருத்தியமைப்பதற்கு முன்னர் தண்டப்பணமான 10 ஆயிரம் ரூபாவே அறவிடப்பட்டது. அந்த தொகை தற்போது ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருந்தாலும் அது முறையாக நடைமுறைப்படத்தப்படவதாக இல்லை. அதற்கு அரசாங்க தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் தடையாக இருக்கிறார்கள். அதன்காரணமாகவே இந்த பிரச்சினை எழுந்துள்ளது.
கேள்வி : பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரி இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பெயர் பட்டியலில் உங்களின் பெயரும் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா?
பதில் : நான் அந்த பெயர் பட்டியலை காணவில்லை. அவ்வாறு இருப்பதற்கான வாய்ப்பும் இல்லை. காரணம் 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து எனது சொத்து விபரங்களை பிரகடனம் செய்து வருகிறேன். அதேபோன்று 1985 ஆம் ஆண்டிலிருந்து எனது சொத்துக்களுக்கான வரி பணத்தையும் செலுத்தியே வருகிறேன். எனது வருமானம் மற்றும் செலவீனங்களை யாராலும் பரிசீலித்து பார்க்க முடியும்.
கேள்வி : அவ்வாறானால் சொத்து விபரங்களை வெளியிடாதவர்களின் பட்டியலில் யார் யாராக இருப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள் ?
பதில் : அவர்களின் தகவல்களையே தற்போது ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர் நெசனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கம் இருந்தும் பயனில்லாதது போல் ஆகிவிடும்.
நான் ஒவ்வொரு வருடமும் எனது சொத்துகளுக்காக இரண்டரை கோடி ரூபா வரிப்பணம் செலுத்துகிறேன். ஆனால் அது குறித்து மக்களுக்கு எந்த தகவலும் தெரியாது. அது குறித்து எவரும் கேட்பதாகவும் இல்லை. அதேபோன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் நேர்மையாக செயற்படுவது அவசியமாகும்.
கேள்வி : ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவு குழுவின் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒருவர் இது குறித்து புதிய விசாரணைகளை முன்னெடுக்க குழு நியமிக்கப்பட வேண்டும் என்ற கூறுகிறார்கள். இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன ?
பதில் : இந்த நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்பதற்கு இந்த ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் சிறந்த உதாரணமாகும். இவ்வாறு தாக்குதல் ஒன்று இடம்பெறுவதற்கான திட்டங்கள் இருக்கின்றன என்று கூறிய போதும் அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வில்லை. சம்பவம் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பான சாட்சிகள் கையில் இருக்கும் போதும் இது குறித்து இன்னும் நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் உள்ளது.
இதற்கான முதல் குற்றவாளி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.அடுத்தவர் சபாநாயகர் கருஜய சூரிய. அதன் பின்னரே சஹரான் குழுவினரை இந்த விடயத்தில் குற்றவாளிகளாக தொடர்புப் படுகின்றனர். இது குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சி வழங்கியுள்ளேன். அவ்வாறு இருக்கும்போது மீண்டும் குழு அமைத்து விசாரணை முன்னெடுப்பது என்பது அவசியமற்றதாகும்.
கேள்வி : திறைசேரியில் நிதி இருப்பு இல்லை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அது தொடர்பில் நீங்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள் ?
பதில் : எனக்கு கிடைத்துள்ள தகவலுக்கு அமைய இந்த மாதத்துடன் அரச சேவையாளர்களுக்கான கொடுப்பனவுகளை கொடுக்க முடியாத அளவுக்கு திறைசேரியில் நிதி இல்லை .இந்நிலையில் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவிடம் நிதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த அரசாங்கம் 11 வருடங்களில் பெற்ற கடன் தொகைக்கு சமமான கடனை இந்த அரசாங்கம் இந்த நான்கரை வருடங்களில் பெற்றுக்கொண்டுள்ளது.
Post a Comment