Header Ads



சஜித் வழங்கியுள்ள, சிறு செவ்வி

ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக சரியான தீர்மானத்தை எடுக்கும் என அந்த கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று -03- முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்திக்க பிக்குமார் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு வந்திருந்தனர்.

பிக்குகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் சஜித் பதிலளித்துள்ளார்.

கேள்வி - ஐக்கிய தேசியக் கட்சியின் உங்கள் சார்பில் குருணாகலில் நடைபெறும் கூட்டம் ஒரு முக்கிய கூட்டமாக அமையும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

பதில் - நடத்தப்படும் அனைத்துக் கூட்டங்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாதுகாப்பு, நலனுக்காக நடத்தப்படும் கூட்டங்கள். இவை ஒரு நபரை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுவதில்லை. கட்சியை வலுப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.

கேள்வி - உங்களால் வெற்றி பெற முடியுமா? சவால் எதுவும் இல்லையா?.

பதில் - நாங்கள் அனைத்து சவால்களையும் வெற்றிக்கொள்ளும் தரப்பு.

கேள்வி - அமைச்சர் அவர்களே உங்களை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை கையளிக்க உள்ளமை தொடர்பாக என்ன கருதுகிறீர்கள்?.

பதில் - கட்சி அது சம்பந்தமான பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும்.

கேள்வி - பிரதமர் வெளிநாடு சென்றுள்ளார். மூன்று நாட்களின் பின்னர் நாடு திரும்பியதும் பொது வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க உள்ளதாக வதந்தி ஒன் று பரவியுள்ளது.

பதில் - கட்சி என்ற வகையில் தீர்மானத்தை எடுக்க வேண்டும். அனைத்து விடயங்கள் குறித்து தேவையான பேச்சுவார்த்தைகளை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கருதுகிறேன்.

கேள்வி - வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டு விட்டார் என அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். உங்களுக்கு இது தெரியுமா? உங்களது பெயரா பரிந்துரைக்கப்பட்டுள்ளது?.

பதில் - ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நான் தயார்.

கேள்வி - இன்னும் இரண்டு மாதம் என்ற குறுகிய காலதே உள்ளது. இந்த கால தாமதம் உங்களுக்கு பாதிப்பாக அமையும் அல்லவா?.

பதில் - நான் எப்போதும் மக்களுடன் இருப்பதால், எந்த பிரச்சினையும் இல்லை.

கேள்வி - உங்களது பெயர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் போது, அந்த நிகழ்வு காலிமுகத்திடலிலா நடத்தப்படும்?.

அப்படியான எந்த விடயங்கள் பற்றியும் பேசப்படவில்லை. பொருத்தமான நேரத்தில் பெருத்தமான தீர்மானம் எடுக்கப்படும் என சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.