சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், மைத்திரியும் கூட்டணி வைத்துக்கொள்வாரா..?
அமைச்சர் சஜித் பிரேமதாச அடுத்த சில தினங்களில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவருடன் கூட்டணியை ஏற்படுத்தி, ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படாவிட்டால், 2020ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பதற்காக ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திடம் சட்ட விளக்கத்தை கோர தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
தனது பதவிக்காலம் 2020ஆம் மே மாதம் 15ஆம் திகதி முடிவடைகிறதா என்பது குறித்து ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்பதற்கான ஆவணங்களை தயார்ப்படுத்தியிருந்தார். எனினும் ஒத்திவைத்துள்ளார்.
சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவருடன் கூட்டணியை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதி இதனை ஒத்திவைத்துள்ளதாக பேசப்படுகிறது.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என உயர் நீதிமன்றம் இதற்கு முன்னர் தீர்ப்பொன்றை வழங்கியிருந்தது.
எனினும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அது கணிக்கப்பட வேண்டும் என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பபாடாக இருந்து வருகிறது.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் சபாநாயகர் 2015ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி கையெழுத்திட்டார். இதனடிப்படையில், ஜனாதிபதி 2020ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி வரை ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்பது சுதந்திரக் கட்சியின் வாதமாக இருக்கின்றது.
எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதிக்கு 2020ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி வரை ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்தால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதி 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தை கலைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment