ஐ.தே.க. வசம் 4 சூத்திரங்கள் - கலந்துரையாடல் தொடருகிறது...!
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் தெரிவு தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியானது நான்கு சூத்திரங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் இந்த நான்கு சூத்திரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க நிறுத்தப்படவேண்டும் என்றும் பிரதமருக்கான வேட்பாளராக சஜித் பிரேமதாஸவும் கட்சியின் தலைவராகவும் கூட்டணியின் தலைவராகவும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்திருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உட்பட பலரும் இந்த சூத்திரத்தை முன்வைத்துள்ளனர்.
அமைச்சர்களான கபீர் காசீம், மற்றும் மலிக் சமரவிக்கிரம உட்பட சில உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவும், பிரதமர் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் கட்சி மற்றும் கூட்டணியின் தலைவராக கரு ஜயசூரியவும் நியமிக்கப்படவேண்டும் என்றும் சூத்திரத்தை முன்வைத்துள்ளனர்.
இதேபோன்றே சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான ஐ.தே.க. எம்.பி.க்கள் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவும் பிரதமர் வேட்பாளராக கருஜயசூரியவும் கட்சி, மற்றும் கூட்டணியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் நியமிக்கப்படவேண்டும் என்று யோசனையை முன்வைத்துள்ளனர்.
அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமர் வேட்பாளராக கரு ஜயசூரியவும் சிரேஷ்ட அமைச்சராக சஜித் பிரேமதாஸவும் கட்சி மற்றும் கூட்டணியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் நியமிக்கப்படவேண்டும் என்ற சூத்திரத்தை முன்வைத்துள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள் ஆராய்ந்துள்ளனர்.
இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக்கட்சிகளின் தலைவர்களும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றனர். இந்த நான்கு சூத்திரங்கள் தொடர்பிலும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர். ஆனாலும் ஐக்கிய தேசியக்கட்சியினர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமக்குள் ஒரு முடிவை எடுத்த பின்னர் அந்த விடயம் தொடர்பில் தாம் இறுதி முடிவை எடுப்போம் என்று கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment