Header Ads



என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா 3 வது கண்காட்சி செப்டம்பர் 7 முதல் 10 வரை யாழ்ப்பாணத்தில்


இலங்கையில் தொழில்முயற்சிகளை  ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டும் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சித் தொடரின் மூன்றாவது கண்காட்சி, செப்டம்பர் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம்,  கோட்டை முற்றவெளியில் நடைபெறும்.

விசேடமாக, வடக்கின் தனித்துவமான பல்வேறுபட்ட தொழில்முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களை வலுப்படுத்தி, புதிய தலைமுறையினரின் தொழில்முயற்சி எதிர்பார்ப்புக்களை மேம்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் தனித்துவமான கைத்தொழில் துறைகளை மேம்படுத்தும் நோக்கில், கைத்தொழில், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்து, வியாபார நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான குறைந்தபட்ச வட்டி நிவாரணக் கடன்களை வழங்குவதை நடைமுறைக்கு கொண்டு வருவதே, இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

வடக்கில் தொழில்முயற்சிக்கான எதிர்பார்ப்புக்களை கொண்ட இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து, அவர்களுக்கு அவசியமான சேவைகள் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில், இந்தக் கண்காட்சித் தளமானது ஏழு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

தொழில்முயற்சியாளர்கள் பிரிவு, அரச மற்றும் தனியார் துறை பிரிவு, கல்விப் பிரிவு, பசுமை பிரிவு, புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவு, வணிகப் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவு ஆகிய 07 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் இதனால், கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு, தமது தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துகொள்ள முடிகின்றது.

தொழில்முயற்சியாளர்கள் பிரிவின் மூலம், அவர்களின் தொழில்முயற்சி அபிலாஷைகளை ஒரு வியாபாரமாக மாற்றுவதற்கான வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொள்வது முதல், அதனை ஆரம்பிப்பதற்கான வட்டி நிவாரணக் கடன்களை பெறுவதற்கான தகுதியை பெறுவது வரையிலான அனைத்து நடவடிக்கைகளையும், ஒரே இடத்தில் மேற்கொள்ள முடியும். 

இதற்காக, நிதி அமைச்சின் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” செயலாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் அனைத்து அரச வங்கிகளின் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” கடன் திட்டம் தொடர்பான அதிகாரிகளின் உதவியைப் பெற்றுகொள்ள முடியும். அத்துடன் குறிப்பிட்ட வங்கிகளின் ஊடாக துரிதகதியில் கடன் தொகையைப் பெறுவதற்கான பதிவுகளை அத்தருணத்திலேயே மேற்கொள்ள முடியும்.

அரச மற்றும் தனியார் துறை பிரிவின் ஊடாக, விஷேடமாக, நாட்டின் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தொடர்பிலும் அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமான தகவல்கள், அமைச்சுக்களின் செயற்பாடுகள் மற்றும் அவற்றினால், பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகள் குறித்த தகவல்களையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும். 

கண்காட்சி நிலையத்துக்கு வருகை தரும், இலட்சக்கணக்கான பாடசாலை மாணவர்கள் மற்றும்  உயர்கல்வி மாணவர்களுக்கென, கல்விப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் அனுசரணையில், பாடசாலை பாடத்திட்டங்களுடன் தொடர்புடைய புத்தகங்கள், விஷேட தள்ளுபடி விலையில்இங்கு விற்கப்படுகின்றன. அத்துடன், மாணவர்களுக்கு அவசியமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கென, பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களும் இந்தக் கண்காட்சிப் பிரிவில் இடம்பெறும். அதேவேளை, உயர்கல்வி வாய்ப்புக்கள் குறித்த வழிகாட்டுதல்களையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தக் கண்காட்சியை பார்வையிட வருபவர்கள், மலிவு விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். குறிப்பாக, இலங்கை முதலீட்டு சபையின் கீழ் உள்ள தொழிற்சாலைகளின் ஆடைகளை, வரி விலக்கு அளிக்கப்பட்ட விலைகளில், இங்கே கொள்வனவு செய்ய முடியும்.

இதற்கு மேலாக, புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கென ஒரு தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், விருது வென்ற கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தின் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு முக்கியத்துவமளிக்கப்படும்.

இலத்திரனியல் ஊடக வலயத்தின் மூலம், பொதுமக்களுக்கு பிடித்தமான இலத்திரனியல் மற்றும் ஊடக பிரதிநிதிகளை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. அத்துடன், பாடசாலை மாணவர்களுக்குரிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விதம், நிகழ்ச்சி நிரல்கள் எவ்வாறு படமாக்கப்படுகின்றன? மற்றும் செய்தி உட்பட பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் எவ்வாறு ஒளிபரப்பப்படுகின்றன என்பதைப் பார்வையிடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் இங்கு கிடைக்கின்றது. 

அதேவேளை, கண்காட்சியின் நான்கு நாட்களும், அரச நிறுவனங்களினால் நடாத்தப்படும் ஏராளமான நடமாடும் சேவைகளும் செயற்பாட்டில் இருக்கும்.

மேலும், சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மருத்துவ சேவைகள் மற்றும் ஆய்வுகூட சேவைகளை, பொதுமக்கள் இலவசமாகப் பெற்றுகொள்ள முடியும்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் பயிர்ச் செய்கை கட்டுப்பாடு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள், தேங்காய் மற்றும் முந்திரி செய்கை சம்பந்தமான கைத்தொழில்கள் குறித்து, விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வுகளும் இங்கு இடம்பெறும்.

சட்டத்தின் பாதுகாப்பை நாடுபவர்களுக்காக, சட்டரீதியான உதவிகளும் இங்கு வழங்கப்படுகிறது. தொழிற்பயிற்சிகளை எதிர்ப்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கென பல தனித்தனியான வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. 

வெளிநாட்டு தூதரக சேவை ஒன்றும் இங்கே செயற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கல்வி நடவடிக்கைகளுக்காக மற்றும் வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு, அவர்களின் கல்வி பெறுபேறு சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியமான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை, உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

பிரதமரின் கீழ் இயங்கும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ், சிறு வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் தேவையான வசதிகளை வழங்குதலும் இங்கு இடம்பெறும். 

காலை 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், தினமும் நாட்டின் மிகவும் பிரபலமான இசைக்குழுக்கள் மற்றும் பிரபல பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.ஏ.ஹசன்,
செய்திப் பணிப்பாளர் 

No comments

Powered by Blogger.