மகிந்தவின் சு.க. உறுப்புரிமை ரத்தாகிவிட்டது, அவர் சுதந்திரக் கட்சி கிடையாது
(எம்.மனோசித்ரா)
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்ட போதே அவரது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை இயல்பாகவே இரத்தாகி விட்டது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, எனினும் இது குறித்து அடுத்த வாரம் இடம்பெறவுள்ள சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று -15- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ஷவின் உறுப்புரிமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கட்சிக்கென்று யாப்பொன்று காணப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினூடாக தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய மஹிந்த ராஜபக்ஷவினுடைய உறுப்புரிமை அந்த யாப்பிற்கமைய இயல்பாகவே இரத்தாகும். எனவே தற்போது அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் கிடையாது.
பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றதால் அவருக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. காரணம் பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி தொடர்பில் இன்னும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அடுத்த வாரம் கூடவுள்ள கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இது குறித்து ஆராயப்படும். அதன் போது எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்ஷவினது எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சர்ச்சைக்கும் தீர்வு கிடைக்கும். எவ்வாறிருப்பினும் மஹிந்த ராஜபக்ஷவின் உறுப்புரிமை நீங்கியுள்ளமை கவலையளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment