Header Ads



மைத்திரியுடன் கோட்டாபய நின்றால் மாத்திரமே, சுதந்திரக் கட்சி தலைநிமிர முடியும் - டிலான்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளன கூட்டத்தில் கலந்துக் கொண்ட தாம் உள்ளிட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

கட்சிக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று நடைபெற்ற கட்சியின் புத்தளம் மாவட்ட சம்மேளன கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பதிலளித்துள்ளார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், விஜித்த முனி சொய்சா, பௌசி, இந்திக பண்டார, மனுஷ நாணயக்கார ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றனர். 

அவர்களுக்கு எதிராக தயாசிறி ஜயசேகர ஒழுக்காற்று விசாரணை நடத்தாமல் இருப்பது அவர் ஐ.தே.க வுக்கு மீண்டும் செல்ல இருப்பதாலா? 

தயாசிறி, ஐ.தே.க வின் தலைவராக சஜித்தை கொண்டுவர முயன்று தோற்று தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் சீர்குலைக்க முயல்கின்றார். 

அதனால் ஐ.தே.க வுக்கு எதிரான பொதுஜன பெரமுனவின் மாநாட்டுக்கு சென்ற எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க துடிக்கின்றார். தயாசிறி ஜயசேகர நிர்வாணமாய் இருப்பதை மக்கள் அறிவார்கள். ஆகவே, அவ்வாறானவர்களுக்கு மக்கள் மிகவிரைவில் விடையளிப்பார்கள். 

அதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், கோட்டாபய நின்றால் மாத்திரமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தலைநிமிர செய்யமுடியும் என கூறிக்கொள்கின்றேன் என்றார்.

No comments

Powered by Blogger.