ஹக்கீமுடைய 2 ஆவது மகளுக்கு திருமணம் - ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்தார்
- திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது -
இந்தியாவின் உள்விவகாரங்களில் தலை யிடுவதை நாங்கள் தவிர்த்துக் கொள்வோம் என்றும், எல்லா இனங்களையும் சமத்துவமாக பா.ஜ.க. அரசு நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின் இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், இலங்கை நகர திட்டமிடல், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இரண்டாவது மகள் திருமணம் செப்டம்பர் 12-ந்தேதி கொழும்பில் நடை பெறுகிறது. அத்திருமணத்தில் கலந்து கொள்ள சென்னைக்கு வருகை தந்து அண்ணா அறி வாலயத்தில் திமு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திருமணத்தில் பங்கேற்க அழைப்பு கொடுத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு, எம்.பி.க்கள் தயாநிதிமாறன், ஆலந்தூர் பாரதி, மற்றும் மணிச்சுடர் செய்தியாளர் திருச்சி ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் முக. ஸ்டாலினை இன்று எனது தனிப்பட்ட விஷயமாகவும், நல்லிணக்க சந்திப்பாகவும் சந்தித்தேன். குறிப்பாக இன்று இலங்கையில் நடக்கும் விவகாரங்கள் குறித்து அது சம்பந்தமாக ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். அதேபோல இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தற்போது நடைபெற்று வருகின்ற பல்வேறு விஷயங்களையும் எங்களுக்குள் பரிமாறிக் கொண்டோம். அடுத்து வருகிற இலங்கை அதிபர் தேர்தல் முக்கிய மான அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும். கள நிலவரங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டோம். பின்னர் அவரிடம் கேட்ட கேள்வி களும் அவர் அளித்த பதில்களும்
கேள்வி : இந்தியாவில் மோடி தலைமையிலான பாது காப்பு எப்படி இருக்கிறது.?
பதில் : இந்தியாவின் உள்விவகாரங்களை நாங்கள் தவிர்த்துக் கொள்வோம். என்னை பொறுத்தமட்டில் ஒரு ஜனநாயக நாட்டில் எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி அதேநேரத்தில் பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் அது குன்றாமல் எல்லா இனங்களையும் சமத்துவமாக நடத்தும் தார்மீக பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பை தற்போதைய பா.ஜ.க. அரசு நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியமாக எதிர்பார்க்கிறோம்.
கேள்வி : இலங்கையின்போருக்கு பிறகு தமிழர்களின் நிலைமை எப்படி இருக்கிறது.,அதை மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?
பதில் : எங்களுடைய அரசாங்கம் 2015-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த காலம் முதல் இன்று வரை இலங்கை தமிழர்கள், சிறுபான்மை சமூகத்தினர் உரிமை விவகாரங்களில் எவ்வளவு தூரம் உரிமைகள் கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன.
பல விஷயங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை என்கிற குறை இருந்தாலும், அதற்கு முன்னர் இருந்த அரசாங்கம் கொடுத்த நெருக்கடிகள் நீங்கியது மட்டுமல்ல, அதற்கான விஷயங்கள் அபகரிக்கப்பட்ட காலங்களில் மீட்டு கொடுக்கின்ற விவகாரம் அதுபோன்ற புதிய சட்ட ஆக்கங்கள், அதிலே சிறுபான்மை சமூக ங்களுக்கு அநியாயங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது போன்ற விஷயங்களில் எங்கள் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி உள்ளது.
என்னை பொறுத்தமட்டில் தீராத விஷயங்கள் நிறைய இருந்தாலும் கடந்த கால அரசாங்கத்தோடு ஒப்பிடும் போது தற்போதைய அரசாங்கம் சிறுபான்மையினருக்கான இயன்ற சில விஷயங்களை செய்துள்ளது.
இன்று முற்றுப்பெறாமல் இருக்கும் சர்ச்சைகள், விமர்சனங்கள் இல்லாமல் இல்லை.
கேள்வி : இலங்கையில் கல்வி கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. குறிப்பாக தொழில்கல்வி
போன் றவைகள் அதற்கான வசதிகள் என்ன செய்யப்பட்டுள்ளன?
பதில் : போருக்கு பிறகு வடக்கிலும், கிழக்கிலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் போதிய கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதே நேரம் யுத்தம் நடந்த காலத்திலும் கூட தேசிய அளவில் நடந்த பயிற்சிகளிலும், நுழைவுத் தேர்வு போன்ற விஷயங்களிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டது. கெடுபிடி நீங்கிய பிறகு இப்போது மக்கள் கூடுதலாக நிம்மதியாக வாழும் சூழல் உருவாகியிருக்கும் நிலையில் கல்வித்தரம் மேம்படும் தருணம் உருவாகியிருக்கிறது.
கேள்வி : இலங்கையில் தமிழர்களை மேம்படுத்துவது குறித்து தி.முக.. தலைவர்களோடு விவாதித்தீர்களா?
பதில் : நான் தனிப்பட்ட விஷயமாக அவரை சந்திக்க நேர்ந்தது. அதனால் கூடிய விவகாரங்கள் குறித்து பேசவில்லை. நல்லிணக்க அடிப்படையில் அவரை சந்தித்து பேசினேன்.
கேள்வி : இலங்கையில் நெருக்கடி நிலை வாபஸ் பெற்ற பிறகு எப்படி இருக்கிறது?
பதில் : அவசர காலம் சட்டம் பயங்கரவாத தாக்குதல் நடந்த பின்னணியில் அவசியமாக தேவைப்பட்டது. அதன் காரணமாக பிறப்பித்தி ருந்தோம். விசாரணையை துரிதப் படுத்துவதற்கும், குற்றவாளிகளை இனம் காண் பதற்கும் சந்தேக நபர்களை கண்டு பிடிப்பத ற்கான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு பின்னர் அச்சூழ்நிலை அகற்றப்பட்ட பின்னர் பயங்கர வாத தடை குறித்த விஷயங்களிலும் அவசர கால சட்டம் அவசியம் தேவையற்றது என்று அரசாங்கம் உணர்ந்து அதே நேரம் தனிமனித சுதந்திரம், மனித உரிமை விவகாரம் மற்றும் அவசர காலம் சட்டம் நீடித்தால் நாட்டுக்கு அயல்நாட்டவர் வருவதில் பாதிப்பு போன்ற விஷயங்களை எல்லாம் கருத்தில் கொண்டு தேவைக்கு அதிகமாக அதை நீடிக்க விடக்கூடாது என்று தான் அவசர காலச் சட்டத்தை வாபஸ் பெற்றோம்.
கேள்வி : இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்களே?
பதில் : என்னைப் பொறுத்த மட்டில் அரசியல் அமைப்புகளில் இருக்கிற சில அம்சங்களை அனுசரிப்பது என்பது அந்தந்த நாடுகளிடையே இருக்கிற ஒரு தார்மீக பொறுப்பாக இருக்க வேண்டும். அதை மீறி நடந்திருந்தால் பாதிப்பது ஓர் உள்நாட்டு விவகாரம் என்ற காரணங்களால் நான் வெளிநாட்டவர் என்பதால் கூடுதலாக குறிப்பிட்டு பேசக் கூடாது.
இவ்வாறு ரவூப் ஹக்கீம் கூறினார்.
முன்னதாக சென்னை மண்ணடியில் இந்திய யூனியன் முஸ்லிம் அலுவலகத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கமீக்கு தலைமை நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநில முதன்மை துணைத்தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில செயலாளர்கள் நிஜாம்தின், காயல் மகபூப், மாவட்ட தலைவர் ஜெய்லாபுதீன், ரவணசமுத்திரம் தமீம் அன்சாரி, திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது, மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
Post a Comment