Header Ads



மருத்துவர் ஷாபி குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை செய்தார், என்பதற்கான சாட்சியங்கள் இல்லை - சட்டமா அதிபர்

மருத்துவர் சிஹாப்தீன் ஷாபி ஆயிரக்கணக்கான சிங்கள தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்துள்ளார் என குற்றம் சுமத்தினாலும் அப்படியான சத்திர சிகிச்சையை செய்தார் என்பதற்கான எவ்வித உறுதியான சாட்சியங்களும் இல்லை என சட்டமா அதிபர் இன்று -25- குருணாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மருத்துவர் ஷாபிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழங்கு இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன் போது சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தார் என்றோ அல்லது குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றத்தை செய்தார் என்றோ உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் மருத்துவர் ஷாபிக்கு எதிராக குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த முடியாது எனவும் சட்டமா அதிபர், நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மருத்துவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நிதி குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் எனவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக குருணாகல் நீதவான் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. சட்டமா அதிபர் முன்வைத்துள்ள வாதத்தை ஏற்பதா இல்லையா என்பதையும் நீதவான் தெரிவிக்கவில்லை.

சட்டமா அதிபரின் வாதங்களை ஏற்றுக்கொள்வதாக நீதவான் அறிவித்தால், மருத்துவருக்கு பிணை வழங்குவது தொடர்பான தனது தீர்மானத்தை தெரியப்படுத்துவார் எனக் கூறப்படுகிறது.

சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்தில் முன்வைத்த வாதமானது, குற்றப் புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்தில் பல முறை முன்வைத்த வாதத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

மருத்துவர் ஷாபி, குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையை செய்தார் என்பதற்கான சாட்சியங்கள் தமது விசாரணைகளில் கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

சட்டப்படியான விசாரணை அதிகாரிகள் தமது விசாரணைகளில் கண்டறிந்த விடயத்தை நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உட்பட சில தரப்பினர், மருத்துவர் ஷாபி குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையை செய்தார் என தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே , மருத்துவ ஷாபியின் சார்பில் அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தள்ள மனு எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

சட்டமா அதிபர் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், அது உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் ஷாபிக்கு சாதகமாக அமையும்.

2 comments:

  1. சட்ட மாஅதிபர் வேறு எதைச் சொல்வார்?,உண்மையைத்தானே சொல்வார்.நாட்டு மக்கள் 99 வீதமானவர்களுக்கு மாத்திரமல்ல,இதில் சம்பந்தபட்ட எல்லோருக்கும் இது தெரியும்.யாருக்காக? ,ஏன்?.

    ReplyDelete
  2. ஞானசாரர் போன்ற அடிப்படைவாதிகளை உள்ளே போட்டால் புலனாய்வுத்துறையினருக்கு நேரம் மிச்சம். இந்த நேரத்தை போதைப்பொருள் ஒழிப்பில் கவனம் செலுத்தலாம்.

    ReplyDelete

Powered by Blogger.