Header Ads



அம்பாறையில் மீன்களின், விலை அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில்  கடந்த சில தினங்களாக நிலவுகின்ற  சீரற்ற காலநிலை   காரணமாக கடும் வெப்பநிலையை அடுத்து   மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் மீன் வகைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பொத்துவில்   முதல் பெரியநிலாவணை  பகுதி வரையுள்ள   கடற்பிராந்தியத்தில் மீன்களின் பிடிபாடு பெருமளவில் குறைவடைந்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

 இதற்கு காரணம் சடுதியாக ஏற்பட்ட  சீரற்ற காலநிலை மற்றும்  காற்றழுத்தம் என்பன    மீன்களின் பிடிபாடு வெகுவாகக் குறைவடைந்தமைக்கான காரணமென அப்பகுதி  மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்வாறு  காற்றுக் காரணமாகக் கடல் கொந்தளிப்பு அடிக்கடி  அதிகரித்துக் காணப்படுகின்றமை கடும் வரட்சியுடனான காலநிலை நிலவுகின்றமை ஆகிய காரணங்களே மீன்களின் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு  கடல் மீன்களில்   ஒரு கிலோ விளைமீன் 900 ரூபாவாகவும் பாரை மீன் ஒரு கிலோ 1400 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 1200 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ1200 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 800 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 1500 ரூபாயாகவும் வளையா மீன் 1000 ரூபா  ஆகவும்  நண்டு ஒரு கிலோ 950 ரூபா  ஆகவும் தற்போது மீனவர்கள் மற்றும் வியாபாரிகளினால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகள் மீன் சந்தைகளில்  வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் இதர சில்லறை  மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

அத்துடன்  அதிகளவான நன்னீர் மீன் இனங்கள் சில இடங்களில் அதிகளவாக  பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போதிலும் விலை அதிகமாக உள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

கல்முனை நகரை அண்டிய சாய்ந்தமருது கல்முனைக்குடி மருதமுனை  நற்பிட்டிமுனை  பாண்டிருப்பு  பெரியநிலாவனை  சேனைக்குடியிருப்பு காரைதீவு நிந்தவூர் அட்டப்பளம் சம்மாந்துறை மாவடிப்பள்ளி  அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று பொத்துவில்   பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும் சவளக்கடை கிட்டங்கி  கல்முனைக்குடி  திருக்கோவில்   உள்ளிட்ட மீன் சந்தைகளிலும் மீன் வரத்துக்கள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

கடற்கரையை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

மேலும் இப்பகுதியில்   மாரி கால பருவ மழை  இன்மையினால்  அங்குள்ள  ஆறு  குளம் ஆகியவற்றில் அதிகளவான  மீன் இனங்கள்  பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறைவடைந்துள்ளது.

இவ்வாறு குறைவாக  பிடிக்கப்படும் நன்னீர் மீன்கள்  மேற்குறித்த சந்தையில் விற்பனைக்காக வரும் போது  அம்மீன்களை  சமையலுக்காக   கொள்வனவு செய்ய  ஆர்வமாக வரும்  மக்களில் சிலர் விலை அதிகரிப்பின் காரணமாக கொள்வனவு செய்யாது திரும்பி செல்கின்றனர். 

தற்போது இப்பகுதியில்   உள்ள வெப்பநிலை காரணமாக     நன்னீர் மீன்  பிடி வெகுவாக குறைந்துள்ளதுடன்    கிட்டங்கி ஆறு  கல்லாறு கோட்டைக்கல்லாறு ஆறு மருதமுனை கரச்சைக்குளம் அக்கரைப்பற்று  முகத்துவாரம்  போன்றவற்றில் குறைந்த அளவிலான நன்னீர் மீன்களே  பிடிக்கப்படுகிறது.

இதில்  கோல்டன் செப்பலி கிலோ 400 ரூபாவாகவும்  கணையான் கிலோ 800 ருபாவாகவும்   கொய் ஒரு கிலோ 400 ஆகவும்  கொடுவா ஒரு கிலோ 1000 ஆகவும்  கெண்டை கிலோ ரூபா 400 ஆகவும்  விரால் கிலோ 1200 ஆகவும்  சுங்கான் கிலோ 800 ஆகவும்  விலாங்கு கிலோ 1000 ஆகவும்  இம் மீன் வகைகள்  அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்களான கெண்டை(கெளுறு) பனையான் மீசைக்காரன் ஆகியவை ஓரளவு  குறைந்த விலையில் விற்பனையாகின்றன.

இதனால் மேற்குறித்த இவ்விரு மீன் வகைகளை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கை இப்பகுதியில் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

மேலும்  நன்னீர் கடல்  மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள்  நாள்தோறும் ஏறடபடும் விலையேற்றங்கள் மீன் பிடி குறைபாடு என்பவற்றினால்    வருமானம் குறைவடைந்துள்ளதாகவும் அரசாங்கம் ஏதாவது நஸ்ட ஈடு ஒன்றை பெற்று தர ஆவண செய்ய வேண்டும் என  தெரிவித்தனர்.

பாறுக் ஷிஹான்

No comments

Powered by Blogger.