Header Ads



அமைச்சுப் பொறுப்பை மீள எடுக்குமாறு, ரணில் பணித்தார் - ஹக்கீம்

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமல், அமைச்சுப் பொறுப்புகளை மீள எடுப்பதில்லையென்ற தீர்மானத்திலேயே ​தான் தொடர்ந்தும் இருப்பதாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தெரிவித்தார்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு, முழுமையான பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பில் இதுவரை அரசினாலோ ஜனாதிபதியினாலோ உறுதிப்பாடுகள் கிடைக்கவில்லையெனத் தெரிவித்த ஹக்கீம் எம்.பி, அண்மையில்கூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சுப் பொறுப்பை எடுக்குமாறு பணித்ததாகக் கூறினார்.

பிரதமரிடமிருந்தும், தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிடைக்காமல், மீண்டும் பதவிகள் எடுக்கப்போவதில்லை என, பதவி விலகிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் கூறியதாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்தார்.

“பல்வேறு அரசியல் தரப்புகளிலிருந்தும் பல அழுத்தங்கள் வந்துகொண்டிருக்கின்றன. நேற்று முன்தினத்துடன், நாங்கள் பதவி விலகி ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. இருப்பினும், முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு, அரசாங்கத்திலிருந்து உத்தரவாதமான பதில் கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்ததும், அதுபற்றி முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம், கூடி ஆராய்ந்த பின்பே முடிவு எடுக்கும்” என்று, ஹக்கீம் மேலும் கூறினார்.

-றம்ஸி குத்தூஸ்

No comments

Powered by Blogger.