Header Ads



திருமண வீட்டில் களேபரம், நபரொருவரின் காதை கடித்து துண்டாக்கிய கொடூரம்

திருமண வீடொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை கடித்து துண்டாக்கிய சம்பவமொன்று பள்ளக்கட்டுவைப் பகுதியில் நேற்று -30- மாலை இடம்பெற்றுள்ளது.

பள்ளக்கட்டுவை நகரின் புறநகர்ப்பகுதியில் வீடொன்றில் திருமண வைபவ உபசாரங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. அதன் போது இருவருக்கிடையில் பழைய குரோதமொன்றினை முன்னிலைப்படுத்தி ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாகியது. இதையடுத்து குறித்த மோதலில் இருவரில், ஒருவரின் வலது பக்க காதைக் கடித்து  துண்டாடியுள்ளார். 

இதனால் அவருக்கு பலத்த இரத்தம் வெளியேறிய நிலையில் அங்குள்ளவர்கள் அவரை துண்டாடப்பட்ட காதுடன் எல்ல அரச வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

அங்கு ஆரம்ப சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னர் அம்புயூலன்ஸ் மூலம்  பதுளை அரச வைத்தியாசலையில் சேர்ப்பித்தனர். இந்நிலையில் துண்டாடப்பட்ட காதை பொறுத்த அவருக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அநேகமாக துண்டாடப்பட்ட காதை பொறுத்த முடியுமென்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து எல்ல பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற புகாரையடுத்து விரைந்த பொலிசார்  காதைத் துண்டாடிய நபரைக் கைது செய்துள்ளனர். விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டவர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக  எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.