Header Ads



ஜனாதிபதியின் சகோதரர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான வர்த்தகர் டட்லி சிறிசேன தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் வைத்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் சகோதரரான டட்லி சிறிசேன ஜனாதிபதி ஒருவரின் சகோதரர் போல் நடந்து கொள்வதில்லை. அவர்கள் அதிகார வெறியில் இருக்கின்றனர்.

மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர்கள், ரொஷானை கொல்வோம் என்று கூறுகின்றனர். பொலிஸ் திணைக்களமும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

எனது முறைப்பாட்டை குற்றப்புலனாய்வு திணைக்களமும் ஏற்றுக்கொள்வதில்லை. அண்மையில் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் என்னை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கும் முறைப்பாடு செய்ய இடமளிக்கவில்லை. மைத்திரிபால சிறிசேன, 20 ஆண்டுகளாக பொலன்னறுவையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

எனினும் வெலிகந்தை பிரதேசத்தில் வாழும் 90 வீதமான மக்கள் வறியவர்களாக இருக்கின்றனர். மணல் மோசடி இடம்பெறுவதாக ஜனாதிபதி அண்மையில் கூறினார்.

மகாவலி மற்றும் சுற்றாடல் ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதியிடம் இருக்கின்றன. நீண்டகாலமாக அவரே இந்த அமைச்சு பதவிகளை வகித்தார்.

அவரது தோல்வியை முழு நாட்டுக்கும் கூறுகிறார். மக்களின் பிரச்சினைகள் தீர்க்க மக்கள் அவர்களை தெரிவு செய்தனர்.

தற்போது அவர்களின் பிரச்சினைகளை மக்களிடம் கூறுகின்றனர். இதுதான் கேலிக்குரிய விடயம் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை உலகில் ஏனைய நாடுகளில் நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ராஜசுகங்களை அனுபவித்து வருகின்றனர். எமது நாட்டின் விவசாயிகள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.