Header Ads



முஸ்லிம்களை இந்நாட்டைவிட்டு, வெளியேற்ற நினைப்பவர்களும் இருக்கின்றனர் - மங்கள எச்சரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் பிரேமதாசதான் வரவேண்டுமென, அக்கட்சியின் ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். மொட்டுச் சின்னத்தின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு, ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் சங்கீதக் கதிரைப் போட்டியாகவே இருக்கின்றது. ஆகவே, அக்கட்சியிலிருந்து யாரை வேட்பாளராகக் களமிறக்கினாலும், அவரைத் தோற்கடித்து வெல்லக்கூடிய ஆதரவு சஜித்துக்குத்தான் இருக்கிறதென, கிராமிய - நகர மட்டத்திலிருந்தும் கருத்து நிலவுகிறது. அதனால், சஜித் ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக இருந்தால் நல்லதென்று நானும் நினைக்கிறேன்” என்று, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கே: உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பின்னர், நீங்கள் பயன்படுத்திய சில வார்த்தைகள், பெரும் சர்ச்கைக்குள்ளாகி உள்ளன. இதுபற்றிய உங்களுடைய விளக்கம் என்ன?

உண்மையில் சொல்லவேண்டிய விடயங்களைத்தான் நான் சொன்னேன். அவற்றை, மீண்டும் மீண்டும் சொல்லவும் தயங்கேன். ஐ.எஸ் பயங்கரவாதிகளினால், நாம் இலக்கு வைக்கப்பட்டோம். இருப்பினும், அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்று அடுத்த வாரமே, நாட்டைப் பழைய நிலைமைக்கு கொண்டுவர முடிந்தது. இதற்கு, பாதுகாப்புப் படையினர், பொலிஸாரின் நடவடிக்கைகளைப் போன்றே, சர்வதேச ஒத்துழைப்பும் வழிவகுத்தது. இதனால், ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கியுள்ளோம். இருப்பினும், அந்தப் பயங்கரவாதத்தைக் கொண்டு, இந்நாட்டுக்குள் இனவாதப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க நினைத்தவர்களின் செயற்பாடுகள், இன்னமும் கைவிடப்படவில்லை. ஐ.எஸ் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தாலும், இந்நாட்டுக்குள் இருக்கின்ற சிங்கள இனவாதிகளைத் தோற்கடிப்பதில் சிரமம் இருக்கிறது.

1983 கறுப்பு ஜூலையை ஏற்படுத்தி, தமிழ் மக்கள் மீது இனவாதச் செயற்பாடுகளைக் கொட்டி, இலட்சக்கணக்கான மக்கள் இந்நாட்டை​விட்டு வெளியேறும்படி செய்ததைப் போன்று, மீண்டுமொரு கறுப்பு ஜூலை போன்றதொன்றை ஏற்படுத்தி, முஸ்லிம்களை இந்நாட்டை ​விட்டு வெ ளியேற்ற நினைக்கும் அளவுக்கு மனவளர்ச்சி குன்றியவர்கள், இந்நாட்டில் இருக்கின்றனர். அவ்வாறானவர்கள் தான், முஸ்லிம்களை இலக்கு வைத்து, சில பல வேலைகளைச் செய்து வருகின்றனர். இறுதியில், இந்தத் தாக்குதல்களுடன் எந்த வகையிலும் தொடர்புபடாத முஸ்லிம் அரசியல்வாதிகளையும் இலக்கு வைத்துச் செயற்படத் தொடங்கினார்கள். ஒட்டுமொத்தமாக, இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும், பயங்கரவாதியாகப் பார்க்கத் தொடங்கியுள்ளார்கள்.

விசேடமாக, விமல் வீரவன்ச போன்ற படிப்பறிவில்லாதவர்களே, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அப்படி ஏனையோருக்கு விரல் நீட்டும் விமல் வீரவன்சதான், 80களில் தெற்கில் வன்முறைகளை நடத்தியவர். இன்று அவர்கள், தங்களைத் தேச பக்தாளர்களாகக் காட்டிக்கொண்டு, சிங்கள - பௌத்த கொடிகளைப் போர்த்திக்கொண்டு, மற்றைவர்களைத் தோலுறிக்கப் பார்க்கிறார்கள். இவர்களுடன், புத்த புத்திரர்களாகத் தங்களைக் காட்டிகொள்பவர்களும் இணைந்துகொண்டு செயற்படுகிறார்கள்.

எங்களுக்கு சிறு வயது முதலே, பௌத்த தத்துவம்தான் கற்றுக்கொடுக்கப்பட்டது. அதில், பௌத்தம் என்பது மதமென்று போதிக்கப்படவில்லை. வாழ்வதற்கான முறைமையே போதிக்கப்பட்டது. அனைத்து உயிரினங்களும் துன்பமின்றி, ஆரோக்கியத்துடன் சிறப்பாக வாழட்டுமெனப் போதித்துக்கொண்டு, மறுபுறத்தில் முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும், அழிக்க வேண்டுமென நினைக்க, பௌத்தனால் ஒருபோதும் முடியாது. அதைச் சொல்லும்போது, சிலருக்கு வழிக்கிறது. இது, சிங்கள பௌத்த நாடல்ல என்று கூறும்போது, சிலருக்கு வலிக்கிறது. ஆனால், செய்ய வழியில்லை. அதுதான் உண்மை.

இது, சிங்கள பௌத்த நாடல்ல. இது, இலங்கையர்களின் நாடு. சிங்களவர்கள் பெரும்பான்மையாகவும் தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று, எல்லா இனத்தவர்களும் இங்கு இருக்கிறார்கள். அப்படியிருக்க, சிங்கள பௌத்த நாடென்று கூறினால், அப்போது தமிழர்களுக்கு நாடு இல்லையா, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கென்ற நாடு இல்லையா? அப்படியானால், தமிழர், முஸ்லிகள், கிறிஸ்தவர்களெல்லோரும் இலங்கையர்கள் இல்லையா? ஒட்டுமொத்தமாகக் கூறுவதாயின், இலங்கைக்குள் இரண்டாந்தரப் பிர​ஜையென்று ஒருவர் இருக்க முடியாது. இலங்கையர் என்பவருக்கு இருக்கவேண்டிய அனைத்து வரப்பிரசாதங்களும், அனைத்தின மக்களுக்கும் இருக்கவேண்டும். இதைத்தான் நான் அன்றும் சொன்னேன், இன்றும் சொல்கிறேன், நான் அ​ரசியலில் இருக்கும் வரை, என்றும் சொல்வேன்.

கே: அடுத்த தேர்தல்களின் போது, தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவையும் இழக்க நேரிடும் அல்லவா?

உண்மையில், ஏன் தீர்வு கிட்டவில்லை என்பது பற்றி, எங்களை விடச் சிறப்பாகத் தமிழ், முஸ்லிம் கட்சிகள் அறிந்துள்ளன. அதனால், எதிர்காலத்தில் இவ்வாறான தீர்வை வழங்கக்கூடிய கட்சியும் ஐ.தே.க தான் என்பதையும், அக்கட்சியினர் அறிவர். ஐ.தே.கவினர் தனித் தீர்மானத்தை எடுக்கக்கூடிய பலத்தை எமக்கு வழங்குவார்களாயின், தீர்வையும் தயக்கமின்றி, எவரதும் துணையுமின்றி வழங்க, ஐ.தே.க கட்டாயம் நடவடிக்கை எடுக்கும்.

கே: அமைச்சர் சஜித் பிரேமதாச தான், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டுமென்ற தோரணையில் அண்மையில் பேசியிருந்தீர்கள். ஏன் அப்படியொரு தீர்மானத்துக்கு வந்தீர்கள்?

இதை, நான் கூறவில்லை. இது என்னுடைய யோசனையும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களிடையே, இன்று இதுபற்றி பாரிய பேச்சு இருக்கின்றது. அவர்களிடையே, சஜித்தான் தெரிவாக இருக்கிறார். மொட்டுச் சின்னத்தின் ஜனாதிபதி வேட்பாளர், ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் சங்கீதக் கதிரைப் போட்டியாகவே இருக்கின்றது. காரணம், ராஜபக்ஷ குடும்பத்திலிருந்துதான், அவர்கள் ஒரு வேட்பாளரைக் களமிறக்கப் பார்க்கிறார்கள். இப்படி எவர் வந்தாலும், வெற்றிகொள்ளக்கூடிய நபர் சஜித் தான் என்ற எண்ணம், இன்று கிராமிய மற்றும் நகர மட்டத்தில் உருவாகியிருக்கிறது. அதைத்தான் நான் அன்று சொன்னேன்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது, எனக்கு எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு. அவருக்கான கௌரவத்தை, நான் எப்போதும் வழங்குவேன். அவருடைய தூரநோக்கு எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகத்தான், ஐ.தே.கவில் நான் இணைந்தேன். ஆகவே, சஜித் ஜனாதிபதியாகவும் ரணில், தொடர்ந்தும் பிரதமராக இருந்தால் நல்லதென்று, நானும் நினைக்கிறேன்.

மேனகா மூக்காண்டி

2 comments:

  1. Dear Hon. Minister, but don't allow fundamendal muslims to take advantage of your neutral policies.

    ReplyDelete
  2. A very good srilankan politician.

    ReplyDelete

Powered by Blogger.