Header Ads



நிந்தவூரின் அபிவிருத்திக்கு எந்த, விதத்திலும் தடையாக இருக்கப் போவதில்லை - தாஹிர்

(சுலைமான் றாபி)  

நிந்தவூர் பிரதேசமானது அபிவிருத்தி  அடையவேண்டும்  என்பதில் தான் மிகவும் கரிசனை கொண்டுள்ளதாகவும், இவ்வூரின் அபிவிருத்திக்கு தான் எந்த விதத்திலும் தடையாக இருக்கப் போவதில்லையென நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தெரிவித்தார்  

நிந்தவூர் பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி சம்பந்தமாக  நேற்று முன்தினம் (25) இரவு நிந்தவூர் பிரதேச அனைத்து விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத்தினர் பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி விடயம் பற்றி தவிசாளரை சந்தித்து கலந்துரையாடும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் ; 

நிந்தவூரில் அமையப்பெற்றுள்ள  மின்  நிலைய விடயத்திலும், எதிர்கால சந்ததிகளின் நன்மை கருதி தீர்க்கமான தீர்வுத்திட்டங்களை முன்வைத்தும் அது இல்லாமல் செய்யப்பட்டது. இன்று அதன் தாக்கம் மக்களை வெகுவாக பாதித்துள்ளது. 

மேலும் நிந்தவூர் பிரதேசம் புதிய சபையின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வந்ததன் பிறகு பல அபிவிருத்தி திட்டங்கள்   நடைமுறைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக முன்னாள்  சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமினால் பல கோடி ரூபா பெறுமதியில் வீதிகள் புனரமைப்பு செய்யப்படுவதுடன், வடிகான்களும் புனரமைப்பு செய்யப்படுகின்றது. 

இந்த வீதிகள் அனைத்தும் எமது சபையின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். இருந்த போதும் இந்த புனரமைப்பு பணிகளுக்காக அமைச்சரினால் எவ்வித அனுமதிகளும் பெறாமலேயே புனரமைப்பு பணிகள் இடம்பெறுகின்றன. எனவே ஊரின் அபிவிருத்தி விடயத்தில்  யார்  வந்து  சேவைகள்  புரிந்தாலும்  அதனை  முழுமையாக  நிபர்த்தி  செய்ய முழு ஒத்துழைப்புக்களை வழங்குவேன். ஆனால் அரசியல் காரணங்களுக்காக  என் மீது வீண் பழி  சுமத்தி ஊரிற்கு வரும் அபிவிருத்தியை தடுப்பதாக என் மீது சேறு  பூச நினைப்பதை  ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு இடமளிக்கவும் மாட்டேன்.  

மேலும் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரின் முயற்சியினால்   பொது விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு 8.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நிந்தவூரின் பிரதான  வீதியோரத்தில் நவீன தெரு விளக்குகள் பொருத்துதல் சம்பந்தமான இராஜாங்க அமைச்சர் சார்பான பிரேரணையை விளையாட்டு கழக சம்மேளன பிரதிநிதிகள் தெரிவித்த போது, இந்த மைதான அபிவிருத்தி விடயத்தில் எம்மால் முதற்கட்டமாக நான்கு மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்து, அதற்கான உத்தரவுகள் அம்பாறை மாவட்ட செயலகத்தினால் பிறப்பித்தும், இறுதி நேரத்தில் அதனை தடுத்து நிறுத்தியவர், தற்போது தான் முன்வந்து வேறு வழியால் மைதான அபிவிருத்திற்காக நிதி ஒதுக்கீடுகளை செய்திருப்பது ஆச்சரியம் அழிக்கின்றது. 

மேலும் பிரதான வீதியின் நவீன மின் விளக்குகளை பொருத்துவதற்காக விளையாட்டுக் கழகங்களிடம் தூது விட வேண்டிய அவசியம் இல்லையெனவும், சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளோடு சேர்ந்து கலந்துரையாடப்பட வேண்டிய  விடயமாகும். இதற்கு விளையாட்டுக் கழங்கங்களை பகடைக்காயாக பயன்படுத்த தேவையில்லை எனவும் தெரிவித்ததுடன், அபிவிருத்தி செய்யப்படவிருக்கும் பொது மைதானத்தின் வரைபடத்தினை சமர்ப்பித்து இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். 

இந்த சந்திப்பில் சம்மேளனத்தின் அங்கத்துவம் வகிக்கும் கழகங்களான லகான், மதீனா, சோண்டெர்ஸ், ஹிக்மா, எமெரெல்ட், மினா, ப்ளூ மௌண்டைன் ஆகிய கழங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டதும்   குறிப்பிடத்தக்கதாகும்.   


No comments

Powered by Blogger.