Header Ads



பௌத்த பேரினவாத வெறிபிடித்த சக்திகள், இப்போது முஸ்லிம்கள் மீது முழுமையாகப் பாய்கின்றன

நாடு சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் கடந்த எழுபது ஆண்டுகளில், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கும், மலையகத் தமிழ் மக்களுக்கும் அவ்வப்போது முஸ்லிம் மக்களுக்கும் எதிராக வாய் பிளந்து இரத்தம் குடித்து வந்த சிங்கள பௌத்த பேரினவாத வெறிபிடித்த சக்திகள், இப்போது முஸ்லிம் மக்கள்மீது முழுமையாகப் பாய்ந்துகொண்டு நிற்கின்றன.

இத்தகைய முஸ்லிம் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட அச்சுறுத்தல்களை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது என அக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த ஏப்ரல் 21உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்ட பேரினவாத வன்முறைகள், சொத்து அழிவுகள் அனைத்து முஸ்லிம் மக்களையும் கடுமையாகப் பாதித்து வருகின்றன. அத்துடன் சந்தேகத்தின்பேரில் சுமார் இரண்டாயிரத்து முன்னூறு வரையான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வயது வேறுபாடின்றிக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  அதேவேளை, இனவாத ஊடகங்களும், சமூகவலைத்தளங்களும் மிக மோசமான முஸ்லிம் விரோதப் பரப்புரைகளை முன்னெடுத்தும் வருகின்றன.

அதேபோன்று முஸ்லிம் விரோதத்தை சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லும் பேரினவாத வெறித்தன நோக்குடனேயே அண்மையில் கண்டியில் முன்னெடுக்கப்பட்ட பௌத்த துறவியும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ண தேரரின் மூன்று நாட்கள் இடம்பெற்ற உண்ணாவிரதம் அமைந்திருந்துடன்,  ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட பௌத்த துறவியான ஞானசார தேரரின் வன்முறைப் பிரச்சாரமும் பரவலாக இடம்பெற்று வருவது கவனிக்கத்தக்கது.

இவர்களால் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் முஸ்லிம் மக்கள் பயப் பீதியுடனும், பதற்றத்துடனும் தமது அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய துன்ப நிலை தொடர்கின்றது.

மேலும், நாட்டின் பிரதான முரண்பாடாக இருந்துவரும் தேசிய இனப் பிரச்சினையின் உள்ளடக்கமான வடக்குக் கிழக்குத் தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் ஆகிய சிறுபான்மைத் தேசிய இனங்களின் தனித்துவங்களும், பண்பாட்டு அடயாளங்களும் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் நியாயமான அரசியல் தீர்வு காணப்பட்டிருப்பின் இன்றைய அவல நிலை தோன்றியிருக்காது.

கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் இரத்த ஆறு ஓட வைத்த அதே சிங்கள பௌத்த பேரினவாத ஆளும் வர்க்க தரகு முதலாளித்துவ சக்திகளே இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக மற்றுமொரு இன, மத அடிப்படையிலான மோதலுக்கு வழி ஏற்படுத்தி வருகின்றன.

மேலும், இத்தகைய முஸ்லிம் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட அச்சுறுத்தல்களை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இவ் அவல நிலைக்குக் காரணமான இஸ்லாமிய மத அடிப்படைவாத சக்திகளின் வன்முறைகளையும் கண்டித்து நிற்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.