Header Ads



அரச ஊழியர்களுக்கான, குசியான தகவல் இது

2019 வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு அமைய அரச ஊழியர்களுக்கான சம்பளம் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளது. 

இதனடிப்படையில் சுமார் 11 இலட்சம் அரச ஊழியர்களுக்கு இரண்டாயிரத்து 500 ரூபா இடைக்கால கொடுப்பனவு அவர்களின் சம்பளங்களுடன் மேலதிகமாக சேர்க்கப்படும். 

பாதுகாப்பு தரப்பினருக்கான கொடுப்பனவுகள் மேலும் அதிகரிக்கப்படும். ஓய்வூதிய கொடுப்பனவில் உள்ள முரண்பாடுகளை நீக்கி விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் சுமார் நான்காயிரம் கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு யோசனையின் அடிப்படையில் 11 இலட்சம் ஊழியர்களுக்கு நாளை முதல் இரண்டாயிரத்து 500 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படும். இதற்காக அரசாங்கம் இரண்டாயிரம் கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. நாளை முதல் அமுலுக்கு வரும் இந்த இடைக்கால கொடுப்பனவுக்கு முன்னதாக வாழ்க்கை செலவு கொடுப்பனவு என்ற வகையில் வழங்கப்பட்டு வந்த ஏழாயிரத்து 800 ரூபா தொடர்ந்தும் வழங்கப்படும் என்று நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

முப்படை அதிகாரிகள் மற்றும் கீழ்மட்ட அதிகாரிகளுக்கான கொடுப்பனவை அதிகரிக்கும் மற்றுமொரு வேலைத்திட்டம் நாளை முதல் அமுலுக்கு வருகிறது. அந்த வகையில் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் முப்படை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை கொடுப்பனவு இரண்டு மடங்காக அதிகரிக்கப்படுகிறது. இராணுவம், கடற்படை மற்றும் விமான படை அதிகாரிகளுக்கும் கொமாண்டோ அதிகாரிகளுக்கும் ஆயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரை கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.