பயங்கரவாதியான றிசாத், மகிந்தவை சந்தித்தது எப்படி..? இதில் தேசத்துரோகி யார்...??
றிசார்ட் பதியூதீன் உட்பட அமைச்சர் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தனர். மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் வரை றிசார்ட் பதியூதீன் பயங்கரமான பயங்கரவாதி. றிசார்ட் பதியூதீன் போகும் பாதையில் கூட செல்ல போவதில்லை என கூறிவந்தனர்.
அத்துடன் றிசார்ட் பதியூதீனை திரும்பிக் கூட பார்க்க போவதில்லை எனவும் கூறினர். பதியூதீன் என்ற பயங்கரவாதியை ஐக்கிய தேசியக் கட்சி பாதுகாப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தி வந்தனர்.
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமை விட பதியூதீனே மிகப் பெரிய தேசத்துரோகி எனவும் கூறி வந்தனர்.
றிசார்ட் பதியூதீன் உட்பட அவரது கட்சியை சேர்ந்த ஆறு பேரை அரசாங்கத்தில் இருந்து விலக்கினால், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் முன்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவங்ச தெரிவித்திருந்தார்.
பதியூதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது, ஜே.வி.பி. அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதாக வீரவங்ச குற்றம் சுமத்தினார்.
எது எப்படி இருந்த போதிலும் றிசார்ட் பதியூதீன் நேற்று மகிந்த ராஜபக்சவை சந்தித்து நட்புறவாக கலந்துரையாடினார். முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவிகளில் இருந்து விலகியது தவறான செயல் என மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
நேற்று முன்தினம் வரை பயங்கரவாதியாக அடையாளப்படுத்தப்பட்ட றிசார்ட் பதியூதீன் நேற்று மதியத்திற்கு பின் தேசப்பற்றாளராக மாறியிருக்க வேண்டும். அல்லது மகிந்த ராஜபக்ச தேசத்துரோகியாக மாறியிருக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ச தேசத்துரோகியாக மாறியிருந்தால், அது விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உட்பட பொய்யான தேசப்பாற்றாளர்களின் வயிற்று பிழைப்பை பாதிக்கும். இதனால், கட்டாயம் றிசார்ட் பதியூதீன் கூட்டு எதிர்க்கட்சியினருக்கு நேற்று தேசப்பற்றாளராக தெரிந்திருப்பார் என சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நேற்றைய சந்திப்பு தொடர்பில் வீரவங்ச மற்றும் கம்மன்பில போன்றவர்கள் தற்போது என்ன சொல்லப் போகின்றனர் என்பதை அறிய விரும்புவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் 53 நாட்கள் ஆதரவு கொடுக்காத கோபம்,பொறாமை யால் புலம்பியது.இனி கூட்டு எதிர்க்கட்சியினரின் வாய்க்கு மஹிந்த பூட்டு போடுவார்.
ReplyDelete