Header Ads



சிங்கள பரம்பரைப் பெயரால், விளிக்கப்படும் முஸ்லிம் குடும்பங்கள்


ஆதி­கா­லத்­தி­லிருந்தே இலங்கை சிங்­கள பௌத்­தர்கள் வாழ்ந்து வந்த எழில் மிகு தீவாகும். பிற்­கா­லத்தில் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்­தோரும் இங்கு குடி­யேறி, இந்­நாட்டின் பிர­ஜை­க­ளா­னார்கள். அவ்­வாறு வந்து குடி­யே­றிய ஒரு இனக்­கு­ழு­ம­மா­கவே இந்­நாட்டு முஸ்­லிம்­களும் திக­ழு­கி­றார்கள்.

ஆனாலும் இதர இனங்­களை விடவும் முஸ்­லிம்­க­ளிடம் விசேட தன்­மை­யொன்று காணப்­ப­டு­கி­றது. அதா­வது அவர்­களுள் ஒரு சில­ரது பரம்­பரைப் பெயர்கள் சிங்­களப் பரம்­பரைப் பெயர்­க­ளோடு இணைந்­த­தா­க­வுள்­ள­மையே இவ்­வாறு சிறப்­பிடம் பெறு­கி­றது. அக்­கு­றண முஹம்­தி­ரம்­லாகே கெதர அபூ­பக்கர், உட­ரட்ட ராஜ­கீய வீம­க­ஹ­கொட்­டுவ வைத்­தி­ய­ரத்ன முதி­யான்­ஸே­லாகே, ராஜ­கீய வைத்­திய பூவெ­லிக்­கட வைத்­தி­ய­ரத்ன முதி­யான்­ஸே­லாகே,  பூவெல்ல குரு­னெ­ஹேலா கெதர, பெஹெத் கே வள­வ்வ, யஹ­ல­தென்ன நய்­த­லா­கெ­த­ர–­மம்­மட்டி தம்பி, வட­தெ­னிய கங்­கா­னம்லா கெதர போன்ற பெயர்­களை உதா­ர­ணங்­க­ளாகக் காட்­டலாம். இன்றும் மத்­திய மலை­நாட்டுப் பகு­தி­களில் இத்­த­கைய சிங்­களப் பரம்­பரைப் பெயர்­க­ளுடன் அழைக்­கப்­படும் முஸ்­லிம்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். குறிப்­பாக கண்டி மாவட்­டத்­தி­லேயே காணப்­ப­டு­கி­றார்கள்.

கலா­நிதி லோனா தேவ­ராஜா எழு­திய, ‘‘இலங்­கையில் முஸ்­லிம்கள்’’ என்ற நூலில், “ஆட்­சி­யா­ளர்­களின் அனு­ச­ர­ணை­யோடு இலங்­கையில் கரை­யோரப் பிர­தே­சங்­களில் வாழ்ந்து வந்த முஸ்­லிம்கள் நாட்டின் உட்­பி­ர­தே­சங்­களில் வாழ்­வ­தற்கு சில காலங்கள் எடுத்­தன” என்று குறிப்­பி­டு­கிறார்.

போர்த்­துக்­கீ­சரின் வரு­கையைத் தொடர்ந்தே கரை­யோ­ரங்­களில் வாழ்ந்த முஸ்­லிம்கள் மத்­திய மலை­நாட்டுப் பிர­தே­சங்­களில் பிர­வே­சிக்க ஆரம்­பித்­தனர்.

லோனா தேவ­ரா­ஜாவின் நூலில் இது­வி­ட­ய­மாக மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது;

“மாத்­த­றையில் இடம்­பெற்ற முஸ்லிம் இனச் சுத்­தி­க­ரிப்பு கார­ண­மாக அபா­யத்தை எதிர்­நோக்­கிய முஸ்­லிம்கள், கண்­டிக்கு இடம்­பெ­யர்ந்­தனர். தந்தை மாயா­துன்­னையைப் போன்றே, 1635 முதல் 1687 சீதா­வாக்க ராஜ­தா­னியை  ஆண்ட ராஜ­சிங்க மன்­னனும் தம் பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­களைக் குடி­யேற்­றினான். மேலும் எதி­ரி­க­ளுடன் போரா­டு­வ­தற்­காக பலம் வாய்ந்த அரா­பிய வீரர்கள் மூவ­ரையும் தம்­முடன் அமர்த்திக் கொண்டான். யுத்தம் வெற்றி கொண்­டதன் பின்னர் அம்­மூ­வ­ரையும் இங்கு தங்­கி­யி­ருக்கும் படி தாராள மனம் படைத்த மன்னன் கேட்டுக் கொண்டான். மலை­யக மங்­கை­களைத் தமக்கு மண­மு­டித்துத் தரும்­படி குறித்த அரா­பிய வீரர்கள் மூவரும் மனந்­தி­றந்து கேட்­டுக்­கொண்­டனர். அவர்­களின் வேண்­டு­கோளை ஏற்ற மன்னன் அதற்­கான வாய்ப்­பு­க­ளையும் திறந்து கொடுத்தான். அரச அனு­ச­ர­ணை­யோடு இடம்­பெறும் கண்­டி­பெ­ர­ஹ­ராவில் கலந்­து­கொண்­டி­ருந்த இளம் கன்­னியர் மூவ­ரையும் அரா­பிய வீரர்கள் கரம் பற்றி அரச மாளி­கைக்கு அழைத்துச் சென்­றனர். அங்கு மறைத்து வைத்­தி­ருந்த அக்­கு­ம­ரி­களின் பெற்றோர் இது குறித்து அர­ச­னிடம் முறை­யிட்­டனர். உங்கள் பிள்­ளை­களை அர­பி­க­ளுக்கு மண­மு­டித்துக் கொடுங்கள் என்று மன்­னனும் அன்புக் கட்­டளை வழங்­கினார். அவர்­களும் அதற்­கி­ணங்­கினர். மண­மு­டித்த அரா­பிய தம்­ப­திகள் மூன்றும் அக்­கு­ற­ணையில் குடி­ய­மர்ந்­தனர்” என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளா­கிய நாம் கண்­டிக்குச் சென்று சிங்­களப் பரம்­ப­ரையில் வந்த பல­ரையும் சந்­தித்து அவர்கள் குறித்த விப­ரங்­களைப் பெற்றோம். அந்த வகையில் பெற்ற தக­வல்கள் வரு­மாறு.

தென்னே வளவ்வே ஐதுருஸ் மொஹம்மட் நிஜாம்தீன் 
(வயது – 63)

நாம் இப்­போது கண்­டியில் வசித்து வரு­கின்ற போதும் எமது பாட்டன்– பாட்டி தெல்­தொட்ட கொனம் கொட கிரா­மத்தில் வாழ்ந்து வந்­துள்­ளனர். எமது முதல் தலை­முறை மஹமு நெய்னா. அவ­ரது சகோ­த­ரர்கள், பாத்த ஹேவா­ஹெட்ட தெல்­தொட்ட( கர­கஸ்­கட) பட்­டி­ய­கம, பல்­லே­கம, உட­கம, உட­தெ­னிய ஆகிய பிர­தே­சங்­களில் வாழ்ந்­துள்­ளனர். அவர்கள் உடஹ, பல்­லேஹா, மெத ஆகிய பல வள­வு­க­ளுக்குச் சொந்­தக்­கா­ரர்­க­ளா­கவும் இருந்­தனர்.

மஹமு நெய்னா சிறந்த வைத்­தி­ய­ரா­கவும் திறமை வாய்ந்த கட்­டடக் கலை­ஞ­ரா­கவும் திகழ்ந்­துள்ளார். பாற்­கடல் கடை­வ­தற்­கு­ரிய ஆலோ­சனைகளைக் கூட அர­ச­னுக்கு வழங்­கி­ய­தா­கவும் கேள்விப் பட்­டுள்ளோம். அதற்­கான நன்­றிக்­க­ட­னாக கொனம்­கொடப் பகு­தியில் காணிகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. சிங்­கள மன்­ன­னு­ட­னான சண்­டையில் போர்த்துக் கீச­ருக்கு எதி­ராக முஸ்­லிம்கள் செயற்­பட்­டதால் குறித்த காணி­க­ளி­லி­ருந்து முஸ்­லிம்கள் துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டனர். அதனால் அவர்­களில் பெரும்­பா­லானோர் மாத்­தளை மற்றும் கண்­டியை அண்­மித்த அக்­கு­றணை, மட­வளை, உடு­நு­வர, கல­கெ­தர, மடிகே ஆகிய பகு­தி­களில் குடி­யே­றினர். அத்­துடன் மஹமு நெய்னா அர­சனின் பிர­தான வைத்­தி­ய­ரா­க பணி­பு­ரிந்­த­தா­கவும் அறி­கிறோம். எமது காணி உறு­தி­க­ளிலும் ‘தென்னே வளவ்வே’ என்ற சிங்­கள பரம்­பரை நாமமே பதி­யப்­பட்­டுள்­ளது.

இக்­கு­டும்­பத்தில் ஐந்­தா­வது பரம்­ப­ரையில் பிறந்­த­வர்தான் நான். ஆறு சகோ­தர சகோ­த­ரிகள் கொண்ட குடும்­பத்தில் நான் நான்­கா­வ­தாகப் பிறந்­துள்ளேன். எனது மனைவி ஓய்­வு­பெற்ற ஆசி­ரியை. எமக்கு நான்கு பிள்­ளைகள். பிற்­கா­லத்தில் நாம் வர்த்­தகத் தொழிலில் ஈடு­ப­ட­லானோம். எனது குடும்­பத்தில் சிங்­கள மொழி மூலம் கல்வி கற்க எனக்கு வாய்ப்­பேற்­பட்­டது. நான் எனது ஆரம்­பக்­கல்­வியை கப­டா­கம விகா­ரையில் பெற்றேன். அங்கு புத்­த­தர்­மத்­தையும் பின்னர் இஸ்­லா­மிய கல்­வி­யையும் கற்றுக் கொண்டேன்.

கல்­வியை முடித்த பின்னர் சுமார் 20 ஆண்­டு­க­ளாக தோட்­டத்­துறை தொடர்­பான ஆலோ­ச­க­ராகப் பணி­யாற்­றினேன். பின்னர் அப்­போது நிதி­ய­மைச்­ச­ரா­க­வி­ருந்த கலா­நிதி சரத் அமு­னு­க­மவின் பாரா­ளு­மன்ற விவ­கார செய­லாளர், முன்னாள் முத­ல­மைச்சர் சரத் ஏக்­க­நா­யக்­கவின் முஸ்லிம் கல்­வித்­துறைச் செய­லாளர், வெளி­நாட்டு தொழில் அபி­வி­ருத்தி அமைச்­சரின் மக்கள் தொடர்பு செய­லாளர் போன்ற பத­வி­க­ளையும் வகித்­துள்ளேன். தற்­போது ஓய்வு நிலையை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கிறேன்.

இது எங்கள் நாடு. சிங்­கள மக்­களைப் பகைத்­துக்­கொண்டு இந்­நாட்டில் செயற்­பட இய­லாது. நாம் சிங்­கள பரம்­பரை நாமம் பூண்ட மக்கள். பௌத்த மக்­களே இங்கு பெரும்­பான்மை. சிங்­களப் பெரும்­பான்­மை­யினர் எங்கள் உற­வினர், எமது நண்­பர்கள். லொக்கு பண்டா என்­பவர் எனது நெருங்­கிய தோழர். எங்கள் பிள்­ளைகள் இன்று சிங்­கள மொழி­மூலம் கற்­றி­ருந்தால் இன்­றுள்ள பிரச்­சி­னைகள் தோன்­றி­யி­ருக்­காது.

கல்­கெட்­டி­யகே பாத்­திமா சிஹானாஅப்துல் ரஹீம்  (வ­யது – 42)

என்னைப் போன்றே எனது கண­வ­ருக்கும் சிங்­களப் பரம்­பரைப் பெயரே உள்­ளது. அராவே கெதர மொஹொம்மட் காலித் என்­பதே அவ­ரது முழுப்­பெயர். நான் கண்டி பதி­யுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்­லூ­ரியில் அதி­ப­ராகக் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருக்­கிறேன். பாட­சாலை அதிபர் விடு­தியில் தற்­போது இருந்து வரு­கிறேன். எனது தாயாரின் பெய­ரிலும் சிங்­கள பரம்­பரை வாச­கமே உள்­ளது. பட்­டான விதா­ன­லாகே பரீதா உம்மா. எமது பெற்­றோரும் ஓய்வு பெற்ற ஆசி­ரி­யர்­க­ளாவர். எனக்கு மூன்று சகோ­த­ரர்கள் உள்­ளனர். நான் சிங்­கள மொழி மூலம் பயின்­றுள்ளேன். எமக்கு மூன்று பிள்­ளைகள் உள்­ளனர். நான் பிறந்த ஊர் தெல்­தொட்ட.

அரே­பி­யா­வி­லி­ருந்தும் இந்­தி­யா­வி­லி­ருந்தும் வர்த்­தக நோக்கில் இங்கு வந்து குடி­யே­றி­ய­வர்­களே இங்­குள்ள முஸ்லிம் பரம்­ப­ரை­யி­ன­ராகும். அரே­பி­யா­வி­லி­ருந்து இங்கு வந்த முஸ்­லிம்கள் இறு­தியில் கண்­டியில் குடி­ய­மர்ந்­துள்­ளனர். அத­னா­லேயே சிங்­கள பரம்­பரைப் பெயரால் அழைக்­கப்­ப­டு­கின்­றனர். அரா­பிய வர்த்­த­கர்கள் சிங்­கள மன்­னர்­க­ளுக்கு நிறைய உத­விகள் புரிந்­துள்­ளனர்.

இங்­குள்ள சிங்­களப் பெண்­களை மண­மு­டித்து, சந்­த­தி­க­ளுக்கு அவர்­க­ளது பரம்­பரைப் பெய­ரையே சூட்­டும்­படி நிபந்­தனை விதித்தே செனரத் மன்னன் அரா­பிய வர்த்­த­கர்­க­ளுக்கு இங்கு வசிக்க இட­ம­ளித்­துள்­ள­தாக எனது தந்தை சொல்லக் கேட்­டி­ருக்­கின்றேன். சிங்­கள பௌத்த வம்ச, குலப் பெண்­ம­ணி­க­ளையே அரா­பிய வியா­பா­ரி­க­ளுக்கு திரு­மணம் செய்து கொடுத்­துள்­ளார்கள். அந்த வழித்­தோன்­றல்­களே நாம். எமது தாய், தந்­தை­யர்­களின் ஆரம்ப வழித்­தோன்­றல்கள் கிரா­மத்­த­லை­வர்­க­ளாக கட­மை­யாற்­றி­யுள்­ளார்கள். எமது அய­ல­வர்கள் சிங்­க­ள­வர்கள். பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக வாழ்க்­கை­யிலும் நண்பர், நண்­பிகள் சிங்­க­ள­வர்­களே. நிர்­வாக சேவையில் பயின்­றதும் சிங்­கள மொழி­மூ­லமே. எனக்கு சிங்­களம், முஸ்லிம் என்­பதில் வேற்­று­மையே தென்­ப­டு­வ­தில்லை.

அநே­க­மாக மதத்தை தனிப்­பட்ட ஒன்­றா­கவே நான் கணிக்­கிறேன். அடுத்­த­வர்­க­ளுடன் தொடர்பு கொள்ள வேண்­டிய ஒன்­றாக மதம் அமை­வ­தில்லை. எனது தனிப்­பட்ட கருத்து, எதிர்­கா­லத்தில் இதே போன்­ற­தொரு பிரச்­சி­னைக்கு வழி­வ­குக்க கார­ண­மாக அமை­யு­மானால், முஸ்­லிம்­களில் ஒரு பகுதி ஒரு பக்­கத்­துக்குள் வரை­ய­றுக்­கப்­பட்­டு­விடும்.

எமது சம­யத்தில் முகத்தை மறைப்­ப­தற்கோ கறுப்பு ஆடை அணியும் படியோ எங்கும் குறிப்­பி­டப்­பட்­டில்லை. இது குறித்த எனது நிலைப்­பாடு என்­ன­வென்றால், நாம் அணியும் உடை பெரும்­பான்மை இனத்­தவர் களுக்குப் பிடிக்­க­வில்­லை­யென்றால், அவர்­களால் அதனைச் சகித்­துக்­கொள்ள முடி­ய­வில்­லை­யென்றால் அது குறித்து விருப்­ப­மில்­லை­யென்றால், எமது எல்­லைக்குள் இருந்து கொண்டு அதனை சீர்­செய்து கொள்­வதில் தவ­றில்லை. கறுப்பு அபா­யாவை உடுக்­காது நிறங்­க­ளி­லான அழ­கிய ஆடை­களை அணி­யலாம். முகத்தை மறைப்­ப­தற்கு நான் பூரண எதிர்ப்பைத் தெரி­விக்­கிறேன். நீண்­ட­கா­லங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே இத்­த­கைய சட்­டங்கள் கொண்டு வந்­தி­ருக்­க­வேண்டும். முகத்தை மூடி­ய­தா­லேயே மற்­ற­வர்கள் சந்­தே­கிக்கும் நிலை உரு­வா­னது. கறுப்­பாடை அணிந்து தம்மை வேறு­ப­டுத்­திக்­காட்டி பாதையில் செல்­லும்­போது இவர்கள் எம்மை விட்டும் தூர­மா­கி­றார்கள் என்று சிங்­கள மக்கள் எடை போடு­கி­றார்கள். பெரும்­பான்மை இனங்கள் விரும்­பாத ஆடையை அணிந்து அவர்­களை விட்டும் தூர­மா­வ­தை­வி­டுத்து, அவர்கள் ஏற்கும் விதத்­தி­லான ஆடை­களை அணி­வதே ஏற்­ற­மாகும்.

வைத்­தி­ய­ரத்ன முதி­யான்­ஸே­லாகே சுலைமா லெப்பே மொகம்மட் தாஸீம் (வயது – 68)

எனது குடும்­பத்தில் சகோ­தர சகோ­த­ரிகள் ஆறு பேர் உள்­ளனர். அவர்­களுள் நான் நான்காம் இடத்தில் இருக்­கிறேன். நாம் வைத்­திய பரம்­ப­ரையில் வந்­த­வர்கள் என்ற போதிலும் தற்­போது எம்மில் எவரும் வைத்­தி­யர்­க­ளாக இல்லை. இப்­போது நாம் ஏழா­வது பரம்­ப­ரை­யாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறோம். கண்டி பூவெ­லிக்­க­டை­யி­லி­ருந்தே எமது பரம்­பரை ஆரம்­ப­மா­கி­றது. அன்று பணம் எதுவும் பெறா­ம­லேயே வைத்­தியத் தொழிலில் ஈடு­பட்­டுள்­ளார்கள்.

பின்னர் அங்­கி­ருந்து ஹந்­தஸ்ஸ, வல்­அ­ரம்ப, எல­தத்த என்ற பகு­திக்கு வந்­துள்­ளார்கள். அப்­போது மலை­நாட்டு சிறைக்­கை­தி­யாக இருந்த ரொபர்ட் நொக்ஸும் இப்­பி­ர­தே­சத்­தில்தான் இருந்­துள்ளார்.

எமது பாட்டன் பாட்­டி­க­ளுடன் இவரும் கதைத்து உற­வா­டி­ய­தாக எமது தந்தை சொல்லக் கேட்­டி­ருக்­கிறேன். எமது பாட்­ட­னார்கள் தலைப்­பாகை அணிந்­தார்கள். அதற்குப் புறம்­பாக வெள்ளை நிறத்­தி­லான சட்­டையும் சாரமும் அணிந்­துள்­ளனர். பெண்கள் சாரி அணிந்து அதன் நுனிப்­ப­கு­தியால் தலையை மூடி முக்­காடு இட்­டுக்­கொள்­வார்கள். இன்­றி­ருப்­பது போன்று முகத்தை மறைக்­க­வில்லை.

எமது ஆரம்ப வீடு கிரா­மத்­திலே பிர­சித்­தி­பெற்ற ஒரு வீடா­கவே விளங்­கி­யது. சிங்­கள, முஸ்லிம் உட்­பட அனை­வரும் இங்கு வந்து உற­வா­டு­வார்கள். எல்­லோரும் மருந்து வகை­க­ளையும் இங்கு தேடிப் பெற்­றுக்­கொள்ளும் ஒரு சூழ்­நிலை காணப்­பட்­டது. மிகவும் இரம்­மி­ய­மா­ன­தொரு கால­மா­கவே அக்­கால கட்­டத்தை வர்­ணிக்­கலாம்.

குரு­கொட முஹம்­தி­ரம்­லாகே அஷ்ஷெய்க் முஹம்­மது சமான் உல் தீன் (வயது – 52)

ஆறாம் பராக்­கி­ர­ம­பாகு மன்­னனின் புதல்வி அர­ச­கு­மாரி மெனிகா நோய்­வாய்ப்­பட்­டி­ருந்தார். அர­சவை வைத்­தி­யர்­களால் அந்­நோயைக் குணப்­ப­டுத்த இய­லாது போனது. அப்­போது வெளி­யி­லி­ருந்து வைத்­தியர் ஒரு­வரை நாடி தேடி­ய­போது வியா­பா­ரத்­திற்­காக இங்கு வந்து தங்­கி­யி­ருந்த அரா­பிய வைத்­தியம் தெரிந்த ஒருவர் அரச குமா­ரிக்கு வைத்­தியம் பார்க்க முன்­வந்தார். அவ­ரது சிகிச்­சையால் சில தினங்­க­ளிலே அர­ச­கு­மாரி சுக­ம­டைந்தாள். அத்­துடன் அந்த அரா­பிய வைத்­தியர் மீது இவள் ஈர்க்­கப்­பட்டாள். இதனைப் புரிந்து கொண்ட மன்னன் சம்­பி­ர­தாய பூர்­வ­மாக இரு­வ­ருக்­கு­மான திரு­ம­ணத்தை நடத்தி வைத்தார். இத்­தம்­ப­திக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தர்மஜீவ பண்டார என பெயர் சூட்டினர். தர்மஜீவ பண்டாரவிலிருந்தே குருகொட மற்றும் அலவத்து கொட முஹாந்திரம் போன்ற முஸ்லிம் பரம்பரைகள் தோற்றம் பெற்றுள்ளன.

இரண்டாம் இராஜசிங்க மன்னன் காலத்தில் போர்த்துக்கீசருடனான சண்டை நடந்தது. அப்போது தர்மஜீவ பண்டாரவின் பரம்பரையில் வந்தவர்களே இராஜசிங்கனுடன் இணைந்து போர்த்துக்கீசரை எதிர்த்துப் போரிட்டனர். இதன் விளைவாக இராஜசிங்கன் வெற்றிவாகை சூடினான். இதற்குப் பிரதியீடாக குருகொட, அலவத்து கொட ஆகிய பகுதிகளின் அரச நிலங்கள் இவர்களுக்கு அன்பளிக்கப்பட்டு இக்குடும்பங்களைக் குடியேறச் செய்தான். இதனாலேயே முஹாம்திரம்லாகே என்ற நாமத்திற்கு முன் மேற்படி இரு ஊர்களின் பெயர்களும் இணைத்து பரம்பரைப் பெயர்களாக விளிக்கப்பட்டு வருகின்றன.

இன்று மேற்படி காணிச் சொந்தக்காரர்களாக இருந்து வியாபாரத்திலும் ஈடுபட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு சிங்கள பரம்பரை நாமம் கொண்டழைக்கப்படும் ஆயிரம் அளவிலான குடும்பங்கள் அக்குறணையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

- சிசிர குமார பண்டார, ஏ.எல்.எம்.சத்தார் -

1 comment:

  1. முஸ்லிம்கள் இந்த நாட்டின் வந்தேறு குடிகள் அல்ல. சோனகர் எனும் சுதேச இனத்தின் வழித்தோன்றல்கள் ஆகும். இதை இலங்கை முஸ்லிம்கள் பற்றி எழுதிய வரலாற்று நூல்கள் சந்தேகத்திற்கிடமில்லாத அடிப்படையில் நிறுவியுள்ளன. பொளத்தம் இந்தியாவிலிருந்து வந்தது என்பதைப் போல இஸ்லாம் அரபு தீபகற்பத்தில் இருந்து வந்தது என்பதே சரியானதாகும். இந்தியாவிலிருந்து வந்த இந்து பொளத்த, இந்து மத சிந்தனைகளை இங்கு வாழ்ந்த சுதேச இனத்தவர்கள் ஏற்றுக்கொண்டதைப்போலவே அரபு தீபகற்பத்திலிருந்து வந்த இஸ்லாத்தையும் இலங்கையில் வாழ்ந்த சுதேசிகள் ஏற்றுக்கொண்டார்கள். இதில் எது முதலில் வந்த சிந்தனை எது பிறகு வந்தது என்பதில்தான் வேறுபாடுகள் உள்ளது. எனவே கட்டுரையாளர் தனது கருத்தை சீர் செய்து மீண்டும் பதிவிடுமாறு தயவாய் வேண்டுகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.