Header Ads



முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டிய, தேசிய வேலைத்திட்டம்

- A.L.Thavam -

பாராளுமன்றத்திற்கு குண்டுவைத்த குடும்பத்தின் உறுப்பினரான, விமல் வீரவன்ச முஸ்லிம்களை துரோகி என்கிறார். மகிந்த கூறியதை போன்று எல்லா முஸ்லிம்களின் வீடுகளும் வியாபாரஸ்தலங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டுமென்கிறார்

👉🏿 இதே முஸ்லிம் சமூகத்தின் மார்க்க தலைமைகள் மற்றும் அரசியல் தலைமைகள் - யுத்த வெற்றிக்கு பின்னரான - ஐ.நா மனித உரிமை ஆணைய யுத்தக்குற்ற பிரேரனையில் - இலங்கையை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக - ஜெனிவாவிற்கு சென்று வாரக்கணக்கில் அங்கு தங்கி நின்று - அரபு / முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு சார்பாக திரட்டிக்கொடுத்ததை மறந்து விட்டார்.

👉🏿 இவர் மட்டுமல்ல இவர்களுடைய தலைவர் மகிந்தவும் மறந்து - இப்போது முஸ்லிம்களை பெரும்பான்மை இனத்தின் கடும்போக்குவாதிகளின் வெறிக்கி தீனியாக்கி - அதனூடாக பெரும்பான்மை மக்களை தம்வசப்படுத்தி - அடுத்த தேர்தல்களில் பெரும்பான்மை இன வாக்குகளூடாக அதிகாரத்தைக் கைப்பற்றலாமென கங்கணம் கட்டியிருக்கிறார்.

👉🏿 அதனால் இப்போது வாய்திறந்தால் முஸ்லிம்களை மிகமோசமாக விமர்ப்பதாகவே அவர்களின் உரைகள் அமைந்திருக்கின்றன. முஸ்லிம் வெறுப்பு பேச்சுக்களையே இவர்கள் பேசுகிறார்கள்.

👉🏿 முஸ்லிம்களின் மிகப்பெரும் ஜனநாயக துரும்பான முஸ்லிம் தலைமைகளின் கூட்டு இராஜினாமாவை விமர்சிக்கிறார்கள். முஸ்லிம் தலைமைகளின் கூட்டிணைவை போன்று - பௌத கூட்டிணைவை ஏற்படுத்தி முஸ்லிம்களை தீர்த்துக்கட்டுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

இவர்களின் இந்த கூப்பாடுகளும் ஊளைகளும் இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை அடங்கப்போவதில்லை.

இந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் முதலீடு "இஸ்லாமிய அடிப்படைவாதமும் முஸ்லிம் தீவிரவாதிகளும்தான்". இந்த தலைப்பு குக்கிராமங்களில் வாழும் பெரியளவில் நாட்டுநடப்போ உலகறிவோ தெரியாத அப்பாவி பெரும்பான்மை மக்கள் மத்தியில் மிகமோசமாக பிரச்சாரம் செய்யப்படப்போகிறது.

பட்டிதொட்டி - மூலை முடிக்கெல்லாம் ஜனாதிபதி தேர்தலுக்கான கருத்தரங்குகள், ஒன்றுகூடல்கள், பொதுக்கூட்டங்கள் என்ற போர்வையில் எந்தத்தடைகளுமின்றி மேற்கொள்ளப்படவுள்ளது. அதாவது முஸ்லிம் வெறுப்புவாதம் கரைத்து ஊற்றப்படவுள்ளது. அதனூடாக முஸ்லிம் அடையாளத்தை கண்டாலே வெறுக்குமளவிற்கு சூழ்நிலைகளை ஏற்படுத்தப்போகிறார்கள்.

இதில் ஆகக்கவலையான விடயமென்னவெனில் - இவ்வாறு முஸ்லிம்களுக்கு இருக்கும் ஆபத்தை புரிந்துகொள்ளாமல் - அற்ப தேவைகள் - அரசியல் அதிகாரங்கள் - சலுகைகளுக்காக - முஸ்லிம்களில் ஒரு சிலரும் - இந்த முஸ்லிம் வெறுப்புவாத பிரச்சாரகர்களுக்கு சார்புநிலை எடுப்பதும் - அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுவதும்தான்.

இவ்வாறு விதைக்கப்படும் முஸ்லிம் வெறுப்புவாதம், அவர்களின் எதிர்கால சந்ததிகளையும் பலிகேட்டு நிற்குமென்பதை இவர்கள் அறியவில்லை. அவர்கள் அறிய அவர்களிடம் நிதானமுமில்லை. ஏதோ ஒன்றின்/ஒருவரின் மீது உணர்ச்சி மேலிட்டவர்களாக அவர்கள் இருப்பதால், அவர்களுக்கு இவ்வாபத்தை எடுத்துச் கூறினாலும் விளங்கும் மனநிலையில் அவர்கள் இல்லை.

இப்போது எல்லா வகையிலான / மட்டத்திலான முஸ்லிம்களுக்கும் இன்றிருக்கும் கடைமை முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் ஏற்பட்டிருக்கும் தப்பபிப்பிராயத்தைக் களைவதாகும். இதற்கான ஒரு தேசிய வேலைத்திட்டத்தினை முஸ்லிம் சிவில் சமூகம் முன்னின்று உருவாக்கி வழிநடாத்த வேண்டும். அரசியல் தலைமைகள் மேற்கொள்ளும் ஏனைய நிகழ்ச்சி நிரலுக்கு சமாந்திரமாக இதுவும் நகர்த்தப்பட வேண்டும்.

1 comment:

  1. I strongly believe and suggest ACJU should take steps through visual media to explain main thoughts about Islam, explain the real interpretation for some selected and widely criticised quranic versus in Sinhala language, and try to make coalition with Sinhala moderate people to keep off Sinhala publics from bankrupted politicians' poised and hardcore propagations. otherwise the situation will be continued in bad manner...?

    ReplyDelete

Powered by Blogger.