Header Ads



ஆடை சுற்றுநிருப விவகாரத்தில், வாங்கிக்கட்டிய செயலாளர்

ஆடை தொடர்பான சுற்று நிருபம் வெளியிடப்பட்டதால் முஸ்லிம் பெண்களில் பலர் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருக்கிறார்கள். அவர்கள் தொழிலுக்குச் செல்வதில்லை. இது தொடர்பில் உங்களுக்குத் தெரியுமா என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்த சுற்று நிருபம் தொடர்பில் சரமாரியாக கேள்விகள் தொடுக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆடைகள் தொடர்பான சுற்று நிருபத்தினை வெளியிட்டிருந்தார். இதனால் ஒரு சமூகத்தினை சேர்ந்த பெண்கள் தொழிலுக்கு செல்வதனை நிறுத்திவிட்டார்கள்.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர், அது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று முந்தினம் (13) சாட்சியமளித்தார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் தெரிவுக்குழு கூடியது. இதில் ஜயம்பதி விக்கிரமரட்ண, ரவி கருணாநாயக்க , சரத்பொன்சேகா , எம்.ஏ.சுமந்திரன் , ஆசுமாரசிங்க , நலிந்த ஜயதிஸ்ஸ, ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரட்ணசிறிக்கும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்கு வாதங்கள் இடம்பெற்றன.

தெரிவுக்குழுவின் உறுப்பினர் சுமந்திரன் இதன்போது கேள்விகளைத் தொடுத்தார். ஆடை தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடுவதற்கு முடிவெடுத்தது யார்?

அதற்குப் பதில் வழங்கிய செயலாளர், அனைவரும் கலந்துரையாடினோம், அமைச்சரிடம் ஆலோசித்துவிட்டு சுற்றறிக்கை வெளியிட்டோம் என்றார்.

அதைத் தொடர்ந்து, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள் என்ன ஆடை அணிந்திருந்தார்கள் என்று சுமந்திரன் கேட்டதற்கு, அமைச்சரே நான் நினைக்கிறேன் அரச ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில், என்று பதிலளித்தார்.

எனினும் விடாது, இப்போது நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள், செயலாளரே எனது கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள் என்ன ஆடை அணிந்திருந்தார்கள்.? என்றார் சுமந்திரன்,

செயலாளர் எனக்குத் தெரியாது என்று மறுக்க, உங்களுக்குத் தெரியாதா என்று திரும்பவும் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மற்றைய உறுப்பினர்களும் செயலாளரிடம் கேள்விகளைத் தொடுத்தனர். அதற்குப் பதில் வழங்கிய அவர்,

ஏப்ரல் 21 சம்பவத்தின் பின்னர் அரச நிறுவனங்களின் பாதுகாப்பு , அரச ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு விடயம் தொடர்பாக எமக்கு பல்வேறு கோரிக்கைகள் கிடைத்தன. இதனை தொடர்ந்து அமைச்சுகளின் செயலாளர்களின் கூட்டத்தில் அது தொடர்பாக தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டன.

இதன்படி சீ.சீ.டி.வி கமெராக்களை பொருத்துவது , அலுவலகங்களுக்கு வருவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களின் பைகளை சோதனையிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் வேறு திணைக்களங்கள், செயலகங்களிலிருந்து ஆடை தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட. இதன்படி முன்னர் இருந்தச் சுற்றுநிருபம் தொடர்பாக மீண்டும் நினைவூட்டும் வகையில் நடவடிக்கைகளை எடுத்தோம்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செயலாளர்களின் கூட்டத்திலும் இது பற்றி கலந்துரையாடப்பட்டது. புத்தளம் , கருவலகஸ்வெவ உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து ஊழியர்கள் சிலரின் கையொப்பங்களுடனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்தே அது பற்றிய சுற்றுநிருபத்தை வெளியிட வேண்டியிருந்தது.

பல்வேறு ஆடைகளை அணிந்துகொண்டு வருவதால் அது அச்சுறுத்தலானது என முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இதன்படி சிறந்த ஒழுக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு ஆடையையும் தடை செய்யாது பொருத்தமான ஆடையை அணிய வேண்டியது தொடர்பாக சுற்றுநிருபத்தின் ஊடாக கூறப்பட்டது என்றார்,

எனினும் இவ்வாறான சுற்றுநிருபத்தினால் ஏற்பட்ட பிரச்சினையால் முஸ்லிம் பெண்கள் பலர் தொழிலுக்கு செல்ல முடியாது விடுமுறையில் வீட்டில் இருக்கின்றனர். இது பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா? இது மனித உரிமை மீறல் விடயம் என குழு உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பினார்

இதற்கு பதிலளித்த செயலாளர், இது மனித உரிமை மீறல் அல்ல, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் செல்ல எந்த அவசியமும் இல்லை. இது அரச துறை சார்ந்த சிக்கல். ஆகவே அரச சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம் . எனினும் இந்த நெருக்கடிகள் குறித்து தான் அறியவில்லையெனவும் எவ்வாறாயினும் அது பற்றி தனக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் செயலாளர் தெரிவித்தார். அத்துடன் யாரேனும் இதன்மூலம் பாதிக்கப்பட்டிருந்தால் தங்களுக்கோ அரச சேவை ஆணைக்குழுவுக்கோ அறிவிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

எனினும் மனித உரிமை விவகாரம் இல்லை என கூறியதை அடுத்து குழு உறுப்பினர்கள் வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தினார். மனித உரிமை இல்லை என நீங்கள் எவ்வாறு கூறமுடியும். நீங்கள் நினைத்த வகையில் தீர்மானம் எடுக்க வேண்டாம். அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்றனர்.

சுற்றுநிருபத்தால் அரச நிறுவனங்களில் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மற்றும் அரச நிறுவனங்களுக்கு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு வரும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பாகவும் குழு உறுப்பினர்கள் அவரிடம் மேலும் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இதன்போது குறித்த சுற்று நிருபம் தொடர்பாக பிரதமரோ , அமைச்சரோ , அமைச்சரவையோ ஏற்றுக்கொள்ளாத நேரத்தில் எவ்வாறு இந்த சுற்று நிருபம் வெளியானது என குழு உறுப்பினர் அவரிடம் கேட்ட போது அது செயலாளர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய செய்யப்பட்டது எனவும் இதில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக காலம் தாழ்த்தாது பொருத்தமான உடையென தெரிவித்து புதிய சுற்றுநிருபமொன்றை வெளியிட நடவடிக்கையெடுக்குமாறு குழுவினர் அவரிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன் இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டு யாரேனும் விடுமுறையில் இருந்திருந்தால் அவர்களுக்கு உரிய மானியங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கையெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. பொல்லைக் கொடுத்து அடி வாங்குற மாதிரி இருக்கு இந்த ரட்ணசிறி ஐயா பார்த்த வேலை.

    ReplyDelete
  2. These bloody book warms must learn what is human rights, diversity and religious freedom.

    ReplyDelete

Powered by Blogger.