ரணில் என்ன பேபியா..? அசுத்த குழியில் மைத்திரி
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு, ரணில் விக்ரமசிங்க நான்கு ஆண்டுகளாக பூசிக்கொண்ட அழுக்கை கழுவும் துணி துவைக்கும் இயந்திரம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -07- நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் நபர்கள் இந்த தெரிவுக்குழுவில் அமர்ந்து தமது அழுக்கை கழுவுகின்றனர்.
ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டவரின் சரத் பொன்சேகா விசாரணை நடத்துகிறார். சரத் பொன்சேகா இந்த சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக நாமல் குமார கூறினார். இப்ராஹிம் நானாவின் மகன்கள் பற்றி விசாரிக்கும் இந்த குழுவில், இப்ராஹிம் நானாவுக்கு தேசிய பட்டியலில் இடம் வழங்கிய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ இருக்கின்றார். மத்திய வங்கியை கொள்ளையிட்டு, கப்பல் வாங்கியவர்கள் இதில் இருக்கின்றனர். அழுக்கான ரணிலின் அழுக்கை கழுவும் வேலையை இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு செய்கிறது.
முன்னாள் பொலிஸ் மா அதிபரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் குற்றச்சாட்டுக்களை இரண்டு பக்கங்களுக்கும் மாற்றிக்கொள்கின்றனர். அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டில் இல்லை என்றால், பிரதமரிடம் அது பற்றி கூறவில்லை. பிரதமர் என்ன பச்சிளம் குழந்தையா?.
பிரதமர் கூறியதால், பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபரும் ரணில் விக்ரமசிங்கவை சுத்தப்படுத்துகிறார். நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக பிரதமர் பொறுப்புக் கூறவேண்டும்.
ஊழல், மோசடிகள் ஒழிக்கப்படும், பொய் பிரசாரம் நிறுத்தப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், சமுர்த்தி வங்கியின் கோடிக்கணக்கான பணத்தை பிரசாரத்திற்காக செலவு செய்கின்றனர். மக்களின் பணத்தில் இந்த வங்கி உருவாக்கப்பட்டது. ஜனாதிபதியை மிண்டும் பதவிக்கு வருமாறு எமது முன்னாள் அமைச்சர்கள் சென்று கோரிக்கை விடுக்கின்றனர்.
பிராமணனாக இருந்தாலும் தீண்ட தகாதவருடன் பழகினால், அவரும் தீண்ட தகாதவர் ஆகிய விடுவார் என்ற பௌத்த வசனம் இருக்கின்றது. இதனால், தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு இப்படி பொய்யான நம்பிக்கைகளை கொடுக்க வேண்டாம். அரசியலில் இருந்து ஒதுங்க போவதாக ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக அசுத்த குழியில் விழுந்து, எமது அரசாங்கத்தில் உருவாக்கிக்கொண்ட நற்பெயரை ஜனாதிபதி கெடுத்துக்கொண்டார். இதனால், எமது அணிக்கு வந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குமாறு நாங்கள், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என பிரசன்ன ரணவீர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment