பாசிக்குடா ஹோட்டலில் நடந்துது என்ன..? ஹிஸ்புல்லாகூறும் காரணம் இதுதான்
21/4 தாக்குதலுக்கு பின்னர், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நிலையில், ஹிஸ்புல்லாஹ், சவுதி அரேபிய பிரஜைகள் சிலரை சந்தித்து கலந்துரையாடிய காணொளி சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
பாசிக்குடாவிலுள்ள ஹோட்டலொன்றிலேயே கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
குறிப்பாக 21/4 தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, கிழக்கு ஆளுநராக பதவி வகித்த ஹிஸ்புல்லா வெளிநாட்டுக்கு தப்பியோடவைத்துள்ளார் என பொதுபல சேனா அமைப்புகூட குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்நிலையில் பாசிக்குடா சந்திப்பு குறித்து இன்று (03) விளக்கமளித்த ஹிஸ்புல்லாஹ்,
“ சவுதி அரேபிய நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்களையே நான் சந்தித்தேன். அவர்களின் கம்பனி சட்டபூர்வமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே, வர்த்தக நடவடிக்கைகள் சம்பந்தமாகவே கலந்துரையாடப்பட்டது. அங்கு வேறு எதுவும் நடைபெறவில்லை. உத்தியோகப்பூர்வமான சந்திப்பே அது.
நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், பிரிதொரு நாளில் கலந்துரையாடலாம் என கூறிவிட்டு நான் புறப்பட்டேன்.
இதையடுத்து பொலிஸார், சி.ஐ.டியினர், ரி.ஐ.டியினரும் ஹோட்டலுக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். கண்காணிப்பு கமராமூலம் பதிவான காணொளிகளும் பெறப்பட்டுள்ளன.
எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை. எனவே, அவை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.” என்றார் அவர்.
Post a Comment