Header Ads



நீர்கொழும்பில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் - அச்சமும் நீடிக்கிறது, இயல்பு வாழ்க்கை பாதிப்பு


உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களையடுத்து, நீர்கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது.

நகரில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்படுவதுடன்,  நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்களில் வியாபாரம் நடவடிக்கைகளும் மந்த கதியில் காணப்படுவதுடன், ஓட்டோ சாரதிகள் தொழில் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பாடசாலைகளில்  மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதால், கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

நீர்கொழும்பு நகரம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணிகள் அதிகம் வருகை தருகின்ற நகரமாகும். தற்போது உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக, ஹோட்டல் தொழில் துறையினரும், அதனை நம்பி வாழ்கின்ற துணை தொழில்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் முஸ்லிம் மக்களின் வீடுகள்  மற்றும்  பள்ளிவாசல் தாக்கப்பட்டமை,  நேற்று (13)  குளியாப்பிட்டிய உட்பட பல பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக,  நீர்கொழும்பு மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். குறிப்பாக முஸ்லிம் மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.

புனித ரமழான் மாதத்தில்  இரவு வேளைகளில் பள்ளிவாசல்களுக்கு சென்று கடைமையை நிறைவேற்ற முடியாத அச்ச நிலையில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் உள்ளனர்.

நகரில் இனந்தெரியாத குழுக்கள்,  இரவு வேளைகளில் வீடுகளுக்கு வந்து அச்சுறுத்துவதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு தரப்பினர் கடமையில்  இருந்தபோதிலும் மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

No comments

Powered by Blogger.