பதவி விலகல் என்ற பேச்சுக்கே இடமில்லை - ஹிஸ்புல்லாவும், ஆசாத் சாலியும் உறுதிபட அறிவிப்பு
தற்போது வகிக்கும் பதவிகளை நாம் கேட்டுப் பெறவில்லை.ஜனாதிபதியே அதனை தந்தார்.எனவே ஜனாதிபதி, தமது பதவிகள் தொடர்பாக எடுக்கும் தீர்மானத்தை தவிர்த்து எந்த சந்தர்ப்பத்திலும் பதவிகளில் இருந்து விலகப் போவதில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா கருத்து தெரிவிக்கையில்,
எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை. அவை எவற்றையும் ஏற்க முடியாது.
அரசியல் ரீதியாக இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் ஜனாதிபதியே தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
ஜனாதிபதியே என்னை நியமித்தார். ஜனாதிபதி தீர்மானத்தை எடுப்பார். சில பிக்குமார் உட்பட சிலர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்
இது குறித்து மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கருத்து தெரிவிக்கையில்,
நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. தனக்கு நம்பிக்கையானவரையே தனது பிரதிநிதியாக ஆளுநராக நியமிப்பார்.
இந்த பதவியை நாங்கள் கேட்டு வாங்கவில்லை. ஜனாதிபதியே நியமித்தார். நாங்கள் ஜனாதிபதிக்கு நம்பிக்கையான எமது பணிகளை முன்னெடுத்து செல்வோம்.
கடந்த நான்கு மாதங்களில் வரலாற்றில் எந்த ஆளுநரும் செய்யாத பணிகளை நான் செய்து முடித்திருக்கின்றேன்.
காய்க்கும் மரத்தின் மீது தான் கல் எறிவார்கள். வேலை தெரியாத டாசன்கள் நாட்டில் பலர் இருக்கின்றனர். சில வாய்ச்சொல் வீரர்கள் இருக்கின்றனர். தவறாக வழிநடத்தப்பட்ட சில பிக்குமாரும் இருக்கின்றனர் என கூறியுள்ளார்.
Post a Comment