Header Ads



முகத்திரை அணிவது தொடர்பான தடையும், குழப்பங்களும்

- YLS ஹமீட் -

மேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு கூறுகின்றது,

“ No person shall wear in any public place any garment, clothing or other material concealing the full face which will in any manner cause hindrance to the identification of a person.”

“ full face” means the whole of a face of a person including the ears.

சுருக்கமாக இதன் பொருள், “ ஒருவரை அடையாளம் காண்பதற்கு எந்தவொரு விதத்திலும் தடையாக இருக்கின்ற முகம் முழுவதையும் மறைக்கக்கூடிய எந்தவொரு ஆடையையோ அல்லது வேறு எந்தப்பொருளையுமோ எந்தவொரு பொது இடத்திலும் யாரும் அணியக்கூடாது.”

“ முழு முகம்” என்பதன் பொருள் காதுகள் உட்பட மொத்த முகமாகும்.

இங்கு இன்று பலரையும் குழப்புகின்ற சொற்கள் ‘ காதுகள் உட்பட’ என்பதாகும்.

இங்கு “ முழு முகம்” என்பதற்கான வரைவிலக்கணமாக, ‘ காதுகள் உட்பட மொத்த முகம்’ என்று தரப்பட்டுள்ளது.

நாம் அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கும்போது காதுகள் வரை திறந்துதான் எடுக்கின்றோம். 

எனவே, இதன் வெளிப்படையான பொருள் ‘ மொத்த முகத்தையும் திறப்பது’ என்றால் அது காதுவரை திறக்கப்பட வேண்டும். காது மூடப்பட்டால் மொத்த முகத்தையும் திறந்ததாகாது. அதேபோன்று மூடுவதானாலும் காதுவரை மூடினால்தான் மொத்த முகம் மூடியதாதாகும். காதை மாத்திரம் மூடுவது மொத்த முகத்தையும் மூடுவதாகாது. அதேநேரம் வர்த்தமானி அறிவித்தல் ‘மொத்த முகமும் திறந்திருக்க வேண்டும்’ எனக் குறிப்பிடவில்லை. மாறாக மொத்த முகமும் மூடியிருக்கக்கூடாது; என்றுதான் குறிப்பிட்டிருக்கின்றது.

இதை வெளிப்படையாக வியாக்கினப்படுத்தினால் காதுவரையுள்ள மொத்த முகத்தில் எந்தவொரு பகுதி திறந்திருந்தாலும் அது “ முழு முகத்தை மூடியதாகாது”. 

ஹிஜாப் என்பது முகத்தில் பெரும்பான்மையான பகுதியைத் திறந்துவைக்கின்ற அதேநேரம் காதை மறைப்பதாகும். எனவே, முகத்தின் பெரும்பகுதி திறந்திருப்பதால் ‘ஹிஜாப்’ முழு முகத்தையும் மூடியதாகாது. 

எனவே, இந்த வர்த்தமானி மூலம் “ ஹிஜாப்பிற்கு தடையில்லை” . இதுதொடர்பாக கௌரவ ஹர்ஷா டி சில்வாவின் விளக்கம் சரியானதாகும்.

இங்கு கேள்வி என்னவென்றால் இந்தத் தெளிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதாகும். இன்று பொதுமக்களில் படித்தவர்கள்கூட இதன் பொருள்கோடலில் பிழையான புரிதலில் இருக்கும்போது அதிகாரிகள் எவ்வாறான புரிதலில் இருக்கிறார்கள்? அவர்களும் பிழையாகப் புரிந்து நடவடிக்கைகள் எடுத்தால் பெண்கள் சிரமத்திற்குள்ளாகவேண்டி வரும்.

எனவே, செய்யவேண்டியது அரசு அதிகாரிகளுக்கு இதுவரை தெளிவுபடுத்தாவிட்டால் அவர்களுக்கும் தெளிவுபடுத்துவதோடு, “ஹிஜாப்பிற்கு தடையில்லை”; என்ற ஒரு பகிரங்க அறிவித்தலையும் விடுக்கவேண்டும். இது தொடர்பாக அரசியல்வாதிகள் அவசரமாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும்.

இந்தத்தாக்குதல் நடந்து பத்து நாட்களாகின்றன. தலைவர்களெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும்தான் கடும் busy யாக இருக்கிறார்கள். கொழும்பில் ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் போன்ற சில பொது அமைப்புகள்தான் அரச மேல்மட்டங்களையும் அதிகாரிகளையும் தொடர்புகொள்ளுகின்ற பணிகளைச் செய்வதாகத் தெரிகிறது. 

தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், மேற்படி பொது அமைப்புகள் கூட்டாக அடிக்கடி சந்திக்கவேண்டும். இதுபோன்ற விடயங்களை அரசின்/ அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து தேவையான நடவடிக்கைகளை அவ்வப்போது எடுக்கவேண்டும்.

இன்று முஸ்லிம் சமூகம் வரலாற்றிலேயே இல்லாத ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள். அவர்களை அநாதை நிலையில் விட்டுவிட்டு வழமைபோன்று show காட்டுவதிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு ( கலந்துகொள்வதைக் குறைகூறவில்லை) முகநூலில் அரசியல் ஆதாயம் தேடுவதிலும் காலங்கடத்தக் கூடாது.

இன்று முஸ்லிம்கள் ஒரு சில வழிகெட்ட நாசகாரர்களின் செயலால் நிலைகுலைந்துபோய் இருக்கின்ற ஒரு சமயத்திலும் வழமைபோன்று தொலைக்காட்சிகளில் பேசிவிட்டு, சமூகவலைத்தளங்களில் அரசியல் செய்கின்ற மனசு எப்படித்தான் வருகிறதோ தெரியவில்லை!

இந்த புர்க்காத்தடை நிரந்தர சட்டத்தினால் செய்யப்படவில்லை. அவசரகால சட்டத்தினால் மட்டுமே தடைசெய்யப்பட்டிருக்கின்றது. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதும் அது வலுவிழந்துவிடும். 

மறுபுறம் மார்க்க அறிஞர்களிடத்தில் முகமூடல் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக இது கடமையாக இருந்தால் முன்னோர்களான நமது உலமாக்கள் இதனைக் கட்டாயப்படுத்தி இருப்பார்கள். புதிதாக உருவான வியாக்கியானங்கள்தான் இன்று முஸ்லிம் சமூகம் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளின் அடிப்படையாகும்.

எனவே, நமது சமூகத்தைச் சேர்ந்த வழிதவறியவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாடும் சமூகமும் மீள்வதற்கு நாம் தொடர் பிரார்த்தனை செய்வோம்.

தலைவர்களே! மக்கள் பிரதிநிதிகளே! நீங்கள் கடந்தகாலங்களில் எவ்வாறு செயற்பட்டபோதும் இந்த இக்கட்டான நிலையில் முஸ்லிம்களுக்கு ஆறுதலாக இருங்கள். அவர்களது இன்றைய சூழ்நிலைப் பிரச்சினைகளை உள்வாங்கி அவ்வப்போது உரியதீர்வுகளை வழங்கி உதவுங்கள். இது உங்கள் கடமை. 

இந்த சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களைக் கைவிட்டுவிட்டு வேறு எப்போது உதவப்போகின்றீர்கள்?

1 comment:

  1. சிக்கலான விடயத்தை தெளிவு படுத்தியுள்ளீர்கள், ஒரு தடவையில் வாசித்து விளங்குவது கஷ்டமாக இருந்தால் வேண்டும் வாசியுங்கள் விளங்கும்.

    ReplyDelete

Powered by Blogger.