Header Ads



இலங்கையில் மத சிறுபான்மையினர், ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர் - ஐக்கிய நாடுகள் சபை

இனவாத ஆயுத மோதலின் அதிர்ச்சியிலிருந்து மீள முயற்சித்துவரும் நாட்டை, தற்போதைய தாக்குதல்கள் மீண்டும் பின்னோக்கி நகர்த்தி வருவதாக  தெரிவித்துள்ளது.

இனப்படுகொலைகளை தடுப்பதற்கான ஐ.நா.வின் சிறப்பு ஆலோசகர் அதாமா டெய்ங் மற்றும் இலங்கையின் மத சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஐ.நா. சிறப்பு ஆலோசகர் கறென் ஸ்மித் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இலங்கையின் அண்மைக்கால வன்முறைகள் ஆசிய பிராந்தியத்தில் தேசியவாத மற்றும் தீவிரவாத கருத்துக்களை அதிகரிக்க செய்துள்ளதுடன், மத சிறுபான்மையினரை ஆபத்தில் தள்ளியுள்ளது.

இந்நிலையில், இந்த வெறுக்கத்தக்க தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு பொருத்தமான மற்றும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம், எதிர்க்கட்சி, சிவில் சமூகம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஆகியோர் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

இனவாத ஆயுத மோதலை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. இது நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளும். எனவே, இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நிலைமை மோசமடையும் சாத்தியம் காணப்படுகிறது.

எவ்வாறாயினும் இவ்விடயத்தில் அரசாங்கத்தின் துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது. இந்நிலையில், இனங்களுக்கிடையே சமாதானத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திற்கு ஐ.நா. ஆதரவு வழங்கும்.

நாட்டின் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டதற்கமைய தமது மதத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு அனைத்து சமூகத்தினருக்கும் உரிமை உண்டு. அதற்கமைய இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.