ரிஷாட் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அவரை நானே பதவியில் இருந்து நிறுத்துவேன் - ரணில்
எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக அமைச்சர் பதவியிலிருந்து ரிசார்ட்டை விலகச் சொல்வது முறையானதல்லவென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று -21- பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடந்த ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தின்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா , எம் பிக்களான காவிந்த ஜயவர்தன , ஹெக்ரர் அப்புஹாமி ஆகியோர் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை வழங்க வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தனர். அதேசமயம் அமைச்சர் ரிஷார்ட் தற்காலிகமாக பதவி விலகுவது நல்லதென இங்கு பேசிய அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இவற்றுக்குப் பின்னர் கருத்து வெளியிட்டபோதே பிரதமர் ரணில் தற்போதைய நிலைமைகளை விளக்கினார்.
“ அமைச்சர் ரிஷார்ட் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய நாம் பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்போம்.அது சுயாதீனமாக ஒரு முடிவை சொல்லட்டும். ரிஷார்ட் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவரை நானே பதவியில் இருந்து நிறுத்துவேன்.அப்படியில்லாமல் கண்டபடி செயற்பட முடியாது. ரிசார்ட்டை பதவி நீக்கி அரசை ஆட்டம் காணச் செய்வதா அல்லது அரசையும் பாதுகாத்து அவரையும் பாதுகாப்பதா என்பதை முடிவு செய்யுங்கள்..” என்று ரணில் இங்கு குறிப்பிட்டார்.
இங்கு பேசிய இராஜாங்க அமைச்சர் அமீரலி தமது தலைவர் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கடும் விசனம் வெளியிட்டதுடன் எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவிகளை உதறித் தள்ளிவிட்டு போக தாங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
Post a Comment