Header Ads



ஜிஹாத்தே இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தல், புலிப் பயங்கரவாதத்தை அழித்ததுபோல் இஸ்லாம் அடிப்படைவாதத்தை அழிக்க முடியாது

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்துக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் மக்களால் நம்பக்கூடிய வகையில் நிரந்தர தீர்வு எட்டப்படாவிடில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் காரணியாக இவ்விடயமே அமையுமென மெகாபொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.  எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தை அழித்ததுபோல் இஸ்லாம் அடிப்படைவாத பயங்கரவாதத்தை அழிக்க முடியாது என சுட்டிக்காட்டும் அமைச்சர் இதற்காக இஸ்லாத்தின் வெவ்வேறு வகையினரை உன்னிப்பாக வேறுபிரித்து அறியவேண்டியது கட்டாயமென்றும் வலியுறுத்துகின்றார்.  அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் அளவளாவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதனை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.  

கே-: இலங்கையில் நடத்தப்பட்ட ஐ.எஸ் தாக்குதல்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா?  

ப: ஒரு சம்பவம் இடம்பெற்றவுடன் அதனை யார் மீது பழி சுமத்தலாம். அதிலிருந்து எவ்வாறு அரசியல் இலாபம் தேடலாம் என்ற நடைமுறைக்கு இலங்கையர்கள் பழக்கப்பட்டு விட்டார்கள். சம்பவத்துக்கு காரணமானவர்கள் யாரென்று தெரிந்திருந்தாலும்கூட மனம் அதனை ஏற்க மறுத்துவிடும். இதுபோன்ற பல அனுபவங்களை நாம் பார்த்துவிட்டோம். இலங்கையில் தாக்குதல் நடத்தியதை ஐ.எஸ் அமைப்பின் தலைவரே ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில்கூட இன்னும் பலரால் அதனை ஏற்க முடியாமலுள்ளது. இது சர்வதேச பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். இது எந்தவொரு அரசியல்வாதியின் தேவைக்காகவும் நாட்டில் நடத்தப்படவில்லை. நிச்சயமாக இது பற்றி தெரிந்திருக்க எந்தவொரு அரசியல்வாதிக்கும் வாய்ப்பில்லை. அப்படியே அவர்கள் ஆதரவு வழங்கியிருந்திருந்தால் அவர்களே முதலில் குண்டை கட்டிக்கொண்டு பாய்ந்திருக்க வேண்டும். அதனால் அக்குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியாது.  

கே-: என்றாலும் சில அரசியல்வாதிகளை இச்சம்பவத்துடன் தொடர்புபடுத்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்துள்ளார்களே?  

ப: வாக்கு, பணம் மற்றும் செல்வாக்கை தேடுவதற்காக சில அரசியல்வாதிகள் அனைவரையும் அணைத்துப்போனார்களே தவிர உண்மையில், அவர்களுக்கு இதன் பின்னணி தெரியாது என்பதுதான் உண்மை. இங்கு அவர்களின் கதாபாத்திரம் அமிர்தலிங்கத்துக்கு ஒப்பானது. தனது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அமிர்தலிங்கம் தமிழர்களுக்கு ஆதரவு வழங்கினார். ஆனால் அவர்கள் ஆயுதம் ஏந்தி தற்கொலை தாக்குதல்வரை செல்வார்கள் என அவர் நினைத்திருக்கவில்லை. தமிழர்களுக்கு உதவுவது மிகவும் ஆபத்தான வேலையென செல்வநாயகம், அமிர்தலிங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தபோதும்கூட, அவர் அதனை பொருட்படுத்தவில்லை. இறுதியில் அனைத்து தமிழ் அரசியல்வாதிகளையும் எல்.ரீ.ரீ.ஈ இனரே கொலை செய்தனர். அமிர்தலிங்கத்தின் மனைவியும் மகனும் இலங்கை வந்தபோதும்கூட அவர்கள் தமது உறவினர்களைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் செல்லவில்லை. மாறாக அமிர்தலிங்கத்தின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைக் கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டுக்கு மட்டுமே சென்றனர். அவர்களுக்கு இப்போது தமது உறவினர்களிலும் சிங்களவர்களே மேலாக தெரிகின்றனர்.  

அதேபோன்றுதான் ரஜீவ் காந்தியை கொலை செய்தது எல்.ரீ.ரீ.ஈ என்பது தெட்டத்தெளிவாக தெரிந்தபோதும் இந்தியா எல்.ரீ.ரீ.ஈயை தவிர்ந்து ஏனைய அனைத்து தரப்பினர் மீதும் குற்றம் சுமத்தி அதற்கான விசாரணைகளை ஆரம்பித்திருந்ததாக சுப்ரமணியம் சுவாமி ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார். அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ யினர், கண்டி தலதா மாளிகையில் தாக்குதல் நடத்தியபோதும் அப்போது பிரதி பாதுகாப்பு அமைச்சராகவிருந்த அனுருத்த ரத்வத்தவை பதவி விலகச் சொல்லி அரசாங்கம் கோரியதே தவிர புலிகள் இதனைச் செய்ததாக திட்டவட்டமாக கூற முன்வரவில்லை. உண்மை தெரிந்திருந்தும் ஏனோ ஏற்றுக்கொள்வதில்லை.  

கே-: சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை, குறிப்பாக அளுத்கம, திகன சம்பவங்களே பூதகரமாக உருவெடுத்துள்ளதென கூறுகின்றார்களே?  

ப: இதில் உண்மையில்லை. சதி செய்யும் நோக்கிலேயே இவ்வாறான கதைகள் உருவாக்கப்பட்டன. வரலாற்றை மீட்டுப் பார்த்தால் பயங்கரவாத அடிப்படைவாதிகள் 2013 ஆம் ஆண்டு முதலே இதற்குரிய வேலைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். அளுத்கம, திகன தாக்குதல்களுக்கு முன்னரே இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. பதிலடியாக இருந்திருந்தால் அந்த இடங்களை விட்டுவிட்டு கொச்சிக்கடை, மட்டக்களப்பு மற்றும் கட்டுவாப்பிட்டியை தெரிவு செய்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.  

கே-: ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் இலக்காக இலங்கை மாறியுள்ளதையடுத்து அரசாங்கம் பாதுகாப்பு தொடர்பில் எடுத்துள்ள தீர்மானங்கள் உங்களுக்கு திருப்தியளித்துள்ளதா?  

ப: தாக்குதல் நடத்தப்போவதாக முன்கூட்டியே அறிவிப்பு விடுத்த பின்னரும் இதுபற்றி தெரியாது என அரசாங்கத்தால் கூறமுடியாது. வவுணதீவு சம்பவத்துடன் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற்ற சம்பவங்களை கோர்த்துப் பார்த்தால் புலிகள், ஜே.வி.பி போன்று ஒரு இயக்கம் இருந்துள்ளமையை இலகுவாக கண்டறிந்திருக்கலாம். அது படையினருக்குரிய வேலை. ஆனால் அதை அவர்கள் முறையாக செய்யாமல் இன்று அரசியல்வாதிகளை குற்றம் சுமத்துவது நியாயமற்றது. ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதலுடன் தொடர்புபட்ட சஹரான் உள்ளிட்ட குழுவினரை அழித்துவிட்டமைக்காக விடுதலைப் புலிகளை அழித்தது போன்று இப்பிரச்சினை இத்துடன் முடிவுக்கு வந்ததாக நிம்மதி பெருமூச்சு விடமுடியாது. இவர்களைப்போன்று மேலும் பலர் உருவாகலாம். அதனால் இவ்விடயம் குறித்து இன்னும் ஆழமாக செயற்பட ​வேண்டியது அவசியம். இந்த அரசாங்கம் என்றில்லை எந்த அரசாங்கமாக இருந்தாலும் இதனை செய்தேயாக வேண்டும்.  

கே-: அப்படியானால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்தவே முடியாதா?  

ப: விடுதலைப் புலிகளை இலகுவில் எம்மால் அடையாளம் காண முடிந்தது. வவுனியா தாண்டியதும் அவர்கள் துப்பாக்கிகளுடன் நின்றார்கள். அவர்களுடனான போராட்டத்தில் அரசாங்கம் புலிகளை முற்றாக அழித்து அப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தது. ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அவ்வாறு முடிவுக்கு கொண்டுவர முடியாது. காரணம் இது ஒருவருடைய தேவைக்காகவோ அல்லது அழுத்தத்துக்காகவோ குழுவாக நடத்தப்படும் போராட்டமல்ல. சஹரானையும் அவர்களது ஆதரவாளர்களையும் இனம் கண்டு கொள்ளமுடிந்தது. ஆனால், தனிப்பட்ட ஜீஹாதிகளை அடையாளம் காண்பது அத்தனை இலகுவல்ல.  

தெளஹீத் அடிப்படைவாதத்துக்கமைய சிவன்,இயேசு உள்ளிட்ட எவரை வணங்குபவர்களும் அழிக்கப்படுவார்கள். பெளத்த மதத்தில் கடவுள் இல்லையென்றால்கூட அவர்களும் கொல்லப்பட வேண்டும் என்பதே தெளஹீத் அடிப்படைவாதத்தின் கொள்கை. குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் அழிக்கப்பட வேண்டும்.  

நாட்டிலுள்ள அனைவரையும் கொன்று குவித்து நாட்டை புதைகுழியாக்க வேண்டும். உதாரணமாக அமெரிக்க இராணுவத்தினரை தாக்க வேண்டும் என்றால் அதற்கு பதிலாக அங்குள்ள தெளஹீத் கொள்கைக்கு புறம்பான முஸ்லிம்களை கொன்று குவிக்க வேண்டும். பலரை அநாதைகளாக்க வேண்டும். இதனை பார்க்க பொறுக்காமல் இராணுவத்தினரும் அதிகாரத்திலிருப்பவர்களும் நாட்டை விட்டு ஓடச்செய்ய வேண்டும் எனும் அவர்களின் இலக்கு எமக்கு புரியும்.  

தீவிர மதப்பற்று காரணமாக அல்லாஹ்வின் விசுவாசிகளற்றவர்களை அவர்கள் அழிக்க நினைக்கிறார்கள். பிரான்ஸில் ஒருவர் ஐஸ்கிறீம் வேனை தாருமாறாக ஓட்டி சுமார் 85 பேரை கொன்றிருந்தார். அவ்வாறு தமது இலக்கை நிறைவேற்ற துடிக்கும் ஒரு தௌஹீத்துக்கு ஆயுதங்களோ வெடிப்பொருட்களோ தேவைப்படாது ஒரு வாகனமே போதும். இவர்களால் தெளஹீத் கொள்கையை பின்பற்றாத ஏனைய முஸ்லிம்களுக்கும் ஆபத்து உண்டு.  

கே-: அப்படியானால் அடிப்படை பயங்கரவாதத்திற்கு முகம்கொடுப்பதற்கு ஏற்ற சமூக மூலோபாயங்கள் எப்படியாக இருக்க வேண்டும்?  

ப: -ஜிஹாத் பயங்கரவாதமே இலங்கை மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. சரியான தகவல்களின் அடிப்படையில் அவர்களின் தாக்குதல்களை முறியடிக்க வேண்டும். புலனாய்வு நடவடிக்கைகள் பலமானதாக அமைதல் வேண்டும். இதற்கு முதலில் இஸ்லாமியர்களிலுள்ள வெவ்வேறு வகையினரை மிகவும் உன்னிப்பாக வேறு பிரித்தறிய வேண்டும்.  

முதலாவது வகையினர் ஜிஹாத் பயங்கரவாத அடிப்படைவாதிகள். இவர்களே அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொள்ளாதவர்களை அழிக்க நினைப்பவர்கள். இவர்களை புத்திசாதூரியத்தால் அடையாளம் காண வேண்டும்.  

இரண்டாம் வகையினர் வன்முறைகளில் ஈடுபடாத வன்முறை கருத்துள்ள ஜீஹாத்வாதிகள். இவர்கள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு நிதி, பிரசாரம், தொடர்பாடல் ரீதியிலான ஒத்துழைப்புகளை வழங்குபவர்கள். இதுபோன்ற பயங்கரவாத உதவியாளர்களுககு எதிராக சட்டம் மற்றும் புலனாய்வுத்துறையை பலப்படுத்த வேண்டும்.  

மூன்றாம் வகையினர் ஏனைய மதத்தினருடன் மோதலுக்குச் செல்லாமல் நாட்டில் சமூக பிரிவினைவாதம் மற்றும் அரபுமயத்தை மேற்கொள்வோர்.தமது ஊருக்கு அரபு பெயர்ப்பலகையை இடுவது, பிள்ளைகளுக்கு அரபு மொழி கற்பிப்பது. சரிஆ சட்டத்துக்கமைய உணவு,உடை,கலாசாரம் என தனியொரு குழுவாக செயற்படுவது இவர்களுடைய போக்காக இருக்கும்.  

நான்காம் வகையினர் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக வாழும் முஸ்லிம்கள்.

இவர்களை பலப்படுத்துவதே நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு உதவும். இதன்மூலம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகையினரை நடுநிலை முஸ்லிம் சமூகமாக உருவாக்க முடியும்.

நேர்காணல்- லக்ஷ்மி பரசுராமன்      

3 comments:

  1. What is his position about the terrorist who destroyed Minuwangoda (killing, burning, destroying srilankan lives and properties) ? How to deal this issue ? Does he has anything to say for this type terrorism ?

    ReplyDelete
  2. why jaffna muslim publish like this deceased perceptions????????????

    ReplyDelete
  3. Its not big deal. Don't worry its very easy. If you and all racist die all terrorism will come to end.
    "Very Easy"

    ReplyDelete

Powered by Blogger.