Header Ads



வாள்களும், இலங்கை முஸ்லிம் வாழ்தலும்..!!

அண்மைக்காலமாக முஸ்லிம்பள்ளிவாசல்களில் கூரிய ஆயுதங்கள் ,குறிப்பாக வாள்கள் இருந்தமை பற்றி  பல்வேறு கருத்துக்களும், கண்டனங்களும் நிலவுகின்றன, அதுபற்றிய பதிவே இதுவாகும்,

#வாள்கள்_ஏன், ?

வாள் எனும் கூரிய ஆயுதம்   புராதன காலத்தில் யுத்தங்களில் பயன்படுத்தப்பட்டதுடன், இவை மன்னராட்சிக்கால கௌரவ அடையாளங்களாகவும் இன்றும் அவர்களது பரம்பரையினராலும், நாடுகளாலும் பாதுகாக்கப்படுகின்றது, இதன்படி அரேபிய நாடுகளில் மாத்திரமல்ல, மேலைத்தேய நாடுகளிலும் அவை ஒரு பாரம்பரியமாகவே உள்ளது,

#வாள்களும்_வன்முறையும்

உலகில் ,துப்பாக்கிப் பாவனை கண்டு பிடிக்கப்பட்ட பின்னர், இந்த வாள்களுடனான போர்த்தொடர்பு இல்லாமல்ஆகிவிட்டது எனலாம், ஆனாலும், ஒரு சில இடங்களில், தற்காப்புக்காகவும், தனிப்பட்ட நோக்கிலும் இவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

#முஸ்லிம்களும்_வாளும்,

உலகில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட சமயம் என்ற ஒரு மேலைத்தேய புனைவுக்  கருத்து உண்டு,  இருந்தாலும்,அதுவே, அதன்பலமாகவும், பலவீனமாகவும் கருதப்படுவதுண்டு, கலீபாக்களின் காலத்திலும், இஸ்லாமிய ஆட்சியிலும், வாள்களின் கீழ் அநீதி இழைக்கப்பட்ட மக்கள் பாதுகாக்கப்பட்ட பல வரலாறுகள் உள்ளன, அதாவது வாள் நீதியை நிலை நாட்டும் சின்னமாகவும் மக்களால் கருதப்படுவதுண்டு, மன்னர் கால,இலங்கையின் இறைமையைப் பாதுகாக்க அன்னியப் படைகளுடன்  வாளால் போரிட்டு தேசத்திற்காக உயிர்துறந்த பல முஸ்லிம் படைத் தளபதிகளையும், வீர்ர்களையும் வரலாற்றில் காண முடியும், அந்தவகையில் தமது பாதுகாப்பிற்கான கருவியாக  முஸ்லிம்கள் வாளை கருதுவதுடன் அதன் மூலம் நீதி கிடைக்கும் எனவும் நம்புகின்றனர்.

#தேசியக்கொடியில்_வாளேந்திய_சிங்கம்,

இலங்கையின் தேசியக் கொடியில் வாளேந்திய சிங்கம் உள்ளது, வாள்  இந்நாட்டின் "இறையாண்மையை"க்  குறிக்கும் அடையாளமாக உள்ளது, இந்த வாள் சின்னம் இலங்கைக்கொடியில் உள்ளடக்கப்பட்டதற்கும் முஸ்லிம்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு, மட்டுமல்ல இந்த வாள் தேசியக்கொடியில் இன்று இடம் பெற்றிருப்பதற்கு காரணம் முஸ்லிம்களே என்பதே வரலாறாகும்,

#முஸ்லிம்_பங்களிப்பு,

இலங்கை சுதந்திரமடைந்தபின்னர், அதற்கான தேசியக்கொடியாக விஜயனின் வரலாற்றுடன் தொடர்புடைய வாளேந்திய சிங்கக் கொடியை அங்கிகரிக்கக்கோரி பிரதமர்DS சேனநாயக்க   அவர்களினால் 16 January 1948 ல் ஒரு பிரேரணை கொண்டு வரப்பட்டது,  அதனை துணிந்து  முன்மொழிந்தவர் அக்கால Batticaloe பாராளுமன்ற உறுப்பினர் A சின்னலெப்பை அவர்கள் ஆகும்,,  அதனை A.E Gonesinghe ஆமோதித்தார்,

#தமிழர்_பிரதி்நிதிகள்_எதிர்ப்பு

 குறித்த சிங்கக் கொடியையும், வாளையும், ஏற்க முடியாது என காங்கேசன்துறை MP, SJV செல்வநாயகம், வட்டுக்கோட்டை MP, கனகரத்தினம் போன்றோர் கடுமையாக எதிர்த்தனர்,

ஆனாலும்  வாளேந்திய சிங்கக்  கொடியை ஆதரித்து அன்று சின்னலெப்பை அவர்கள் மிகத் துணிவான கருத்துக்களை முன்வைத்தார் , அதில் முஸ்லிம்களும் வாளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்தார்,
இந்த வாளின் மூலமான இறைமையை முஸ்லிம்கள் நம்புகின்றனர், என்றும் அது  சிறுபான்மையினரை பாதுகாக்கும் எனவும் தெரிவித்தார், அவரது உரை இலங்கை வரலாற்றில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது,

#ஆணைக்குழு_அங்கிகாரம்,

குறித்த பிரேரணையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி அன்றைய பிரதமரால் ஒரு குழு நியமிக்கப்பட்டது, அதில்

1). SWRD பண்டாரநாயக்க ( தலைவர்),
சேர் ஜோன் கொத்தலாவல,
ஜே,ஆர், ஜயவர்டன,
கலாநிதி,டீ.பி, ஜாயா,
கலாநிதி ,LA ராஜபக்‌ஷ,
ஜி்ஜி். பொன்னம்பலம்,
செனட்டர் எஸ் நடேசன்,
கலாநிதி செனரத் பரணவிதாரண,
போன்றோர் அங்கம் வகித்தனர்,

குறித்த குழுவில் சிங்கத்திற்கும், வாளுக்கும் தமிழ்பிரதிநிதிகள் மீண்டும்  எதிர்ப்பு தெரிவித்தனர், குறிப்பாக செனட்டர் நடேசன் பூரணமாக எதிர்த்ததோடு இறுதி அறிக்கையில் ஒப்பமிடவும் மறுத்தார், ஆனால் முஸ்லிம் பிரதிநிதியான  கலாநிதி ஜாயா அவர்கள்  அதனை சிங்களவர்களுடன் இணைந்து ஆதரித்து அறிக்கை வெற்றி அடைய பங்காற்றினார், 

இது இலங்கையின் தேசியக் கொடியில்  வாளேந்திய சிங்கத்தை பாதுகாக்க முஸ்லிம்கள் தம்மை அர்ப்பணித்த இரண்டாவது தருணம்

இதுபற்றி Carol Aloysius எழுதிய The Srilankan Lion flag how it  came  to be எனரற கட்டுரையிலும், HM . Herath எழுதிய National Flag and National Anthem of Srilanka, Walter Wijayanayakka எழுதிய Srilanka 's National flag,Part of Constitution, போன்ற கட்டுரைகளிலும் காண முடியும், அத்தோடு மறைந்த முஸ்லிம் தலைவரான கலாநிதி அஷ்ரஃப்  அவர்கள் சோம  ஹாமதுருவுடனான விவாதத்தின் போதும் இந்த விடயத்தை இலங்கை முஸ்லிம்களின் நாட்டுக்கான அர்ப்பணிப்பாகவும் குறிப்பிட்டுள்ளார்

அந்தவகையில் இந்த தேசத்தின் அடையாளமாக சிங்கமும், அதன்வாளும் அமைந்ததிலும், அவை பற்றிய வரலாற்றிலும் முஸ்லிம்கள் தம்மை அர்ப்பணித்துள்ளதுடன், வாளை  தமது வாழ்வியல்  கலாசார  சின்னமாகவும் கருதி வந்துள்ளனர் 

#இன்றைய_நிலை,

இலங்கையில் 21:04:2019 அன்று இடம்பெற்ற வஹாபிய தௌகீத் பயங்கரவாதிகளின் தாக்குதலின் பின்னர் நாட்டில் உள்ள 2500  பள்ளிவாசல்களில் இரண்டு பள்ளிவாசல்களில் மட்டுமே, வாள்கள் கண்டு பிடிக்கப்பட்டமை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவும், அச்சமான விடயமாகவும் ஏனையோர்களால் நோக்கப்படுகின்றது

 ஆனால்  அவை தற்காப்புக்கான ஆயுதங்களாகவே அவ் இடங்களில் உள்ளவர்களால்  வைக்கப்பட்டிருக்கின்றன,என்பதே உண்மை.

இலங்கையில் வாள்கள் வைத்திருப்பது தொடர்பில்  சட்டத் தெளிவு இல்லாத அதேவேளை, கடந்த வருடங்களில் நாட்டில் இடம்பெற்ற இனவாத வன்முறைகளில் முஸ்லிம்களின் உயிர்களும், பொருளாதாரமும், குறிப்பாக பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப் பட்டமையினாலும், தம்மைத் தாக்க வருபவர்களிடம் இருந்து தம்மைப்பாதுகாக்கும்  என்ற நோக்கில்  இவை வைத்திருக்கப்பட்டிருக்கலாம் என்பதே இதன் உண்மையான மதிப்பீடாகும் ,

#தீர்வுகள்,

குறித்த அளுத்கமை, காலி, திகணை, கலவரங்களில்  ஒரு இறைமை உள்ள அரசு என்றவகையில் தமது பிரசைகளான முஸ்லிம்களை சரியான முறையில் பாதுகாக்கத் தவறியமையும் ,குறித்த நபர்களை தமது தற்பாதுகாப்பை தமது கரங்களில் எடுக்கத் தூண்டி இருக்கலாம், இதனையே பீல்ட்மார்ஷல் பொன்ஷேகா அவர்களின் கூற்றும் உறுதிப்படுத்துகின்றது,

அந்தவகையில் முஸ்லிம் பள்ளிகளில் இருந்த்தாக கூறப்படும் வாள்களால் இதுவரை யாருக்கும் தீங்கு ஏற்படவில்லை,, அதனைப் பற்றி வீண் விமர்சனங்களையும் ,அச்சத்தையும் போதிப்பதன் மூலம் ஒரு சமூகத்தை உளவியல் ரீதியாக குற்றவாளிகளாக்குவதை ஊடகங்களும், ஏனையோரும் நிறுத்துவதுடன், முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகத்தலைவர்கள் இதுபற்றி தமது உண்மை நிலையை அச்சமின்றி தெளிவாக ஒரே குரலில்  கூற வேண்டும்,

கடந்த காலங்களில் அரசுகள் முஸ்லிம்களை சரியாகப் பாதுகாத்திருந்தால் இந் நிலை ஏற்பட்டிருக்காது என்பது மட்டுமல்ல, இந்நிலை தொடராமல் இருக்க இப்போதாவது அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முயற்சிக்க வேண்டும், மாறாக இது தொடர்பான வீணான செய்திகளையும், வியாக்கியானங்களையும் கூறுவது இருக்கின்ற நிலையை இன்னும் சிக்கலடையவே செய்யலாம்,

எனவேதான், முஸ்லிம் சமூகம், ஒரு சில பயங்கரவாதிகளின் செயலைக்  கண்டிக்கும் அதேவேளை , இந்நாட்டிற்கு நாம் பல நூற்றாண்டுகள் செய்துள்ள அர்ப்பணிப்பையும் நினைவில் கொண்டு உளவியல்ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஒரு உறுதியான சமூகமாக திரும்பவும்  மீண்டெழுவோம், .. இத்தேசத்தை உலகளவில் உயர்த்த முஸ்லிம்கள்  என்ற வகையில் எமது பூரண ஒத்தழைப்பை என்றும்  வழங்குவோம்,

MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA.
12:05:2019


3 comments:

  1. மக்களின் அதுவும் இனரீதியாக அச்சுறுத்தப்பட்ட மக்களின் தற்காப்பு உரிமையை எந்த நாட்டு அரசும் பாதுகாப்புத் துறையும் புரிந்துகொள்ளவேண்டும். முஸ்லிம் என்பதற்காக தற்பாதுகாப்பு உரிமையை கேழ்விக்குள்ளாக்க முடியாது. மேலும் கடந் தசாப்தத்தில் பல இனவாரித் தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள சூழலை யாரும் மறுக்க இயலாது. கைப்பற்றிய வாழ்களில் குடும்ப நினைவுச் சின்னங்கள் இருந்தால் அதை பாதுகாத்து திரும்ப உரியவரிடம் திரும்ப கையள்ப்போம் என்கிற உறுதி மொழியை அரசு வளங்க வேண்டும்.

    ReplyDelete
  2. Good article sir. Will uneducated government realize it?

    ReplyDelete
  3. குறித்த தாக்குதலை ஐஎஸ் பயங்கவாதிகள் பொறுப்பேற்ற பின்னரும் தொளஹீத் அமைப்புகளை பயங்கரவாதிகளாக காட்ட முற்படுவது பக்கச்சார்பான காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகும்.

    ReplyDelete

Powered by Blogger.