எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும், அரசாங்கத்தை நிச்சயம் கைப்பற்றுவோம் - மஹிந்த
நாட்டில் எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிக் கொண்டு அரசாங்கத்தை நிச்சயம் கைப்பற்றுவோம். அடுத்த வருடம் மே தினம் உழைப்பாளிகளுக்கு பல சலுகைகளை பெற்றுக் கொள்ளும் ஒன்றாக காணப்படும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவினர் ஏற்பாடு செய்த மே தின கூட்டம் கோட்டை நகர சபை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது . இதில் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு உழைப்பாளிகள் தொடர்பில் எவ்வித அக்கறையும் கிடையாது. சர்வாதிகாரமான போக்கில் ஆட்சியினை முன்னெடுத்து செல்வதும், அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் தொழிலாளர்களை வன்முறைகளின் ஊடாக அடக்குவதில் மாத்திரமே கவனம் செலுத்தியது.
முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன மே தினத்தை இரத்து செய்தார் இதற்கு எதிராக லங்கா சமசமாஜ கட்சி போராட்டத்தை முன்னெடுத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் மே தின கூட்டத்தை நடத்துகையில் அரசாங்கம் பலவந்தமாக அடக்குமுறையில் ஈடுப்பட்டது. 1996ம் ஆண்டும் மே தினம் இரத்து செய்யப்பட்டமைக்கு அப்போதைய அரசாங்கம் பல்வேறு காரணிகளை குறிப்பிட்டமையினை ஏற்றுக் கொள்ள முடியாது.
தொழிலாளர்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பத்தில் இருந்து அக்கறை கொள்ளவில்லை. இவர்கள் மேற்கத்தைய தொழிற்கலாச்சாரத்திற்கு அடிபணிந்து செயற்படுவதே பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் தற்போது கொள்கையற்ற அரசாங்கம் ஆதிக்கம் செலுத்துவதால் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
அரச தலைவர்களுக்கிடையில் காணப்படுகின்ற போட்டித்தன்மை இன்று சர்வதேச தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுறுவதற்கு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்பும், தேசிய நல்லிணக்கமும் வீழ்ச்சியடைந்துள்ளமையினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்நிய புலனாய்வு பிரிவினர் முன்கூட்டியே தாக்குதல்கள் தொடர்பில் எச்சரித்தும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் ஏன் முன்னெடுக்கவில்லை. இதன் பின்னணியில் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது தமது இயலாமையினை மறைக்க பிறர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்த வழிகள் அரசாங்கத்தால் தேடப்படுகின்றது.
தீவிரவாதத்தை வெற்றிக் கொள்ள எமது புலனாய்வு பிரிவினருக்கும், இராணுவத்தினருக்கும் வல்லமை காணப்படுகின்றது. சர்வதேச இராணுவத்தினரது உதவியை நாடுவது நிலைமையினை மேலும் பாரதூரப்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment