Header Ads



சூடாக்கப்படும் ரிஷாத்தின் அரசியல் களமும், பேரினவாதிகளின் பந்துவீச்சும் - ஆட்டமிழப்பு ஏற்படுமா...?

- சுஐப் எம் காசிம் -

இலங்கை முஸ்லிம்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்குதல்கள்,கெடுபிடிகளிலிருந்து ஆறுதல் குரல்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை சில சக்திகள் ஒடுக்க முனையும் போக்குகள் அரசியல் களத்தை அனல் தெறிக்க வைத்துள்ளது. நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்த இத்தீய சக்திகளின் ஒடுக்கல் போக்குகளும் ஓரங்கட்டும் முயற்சிகளும் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அச்சுறுத்துகின்றன. மதத்தின் பெயரால் எமது நாட்டில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களைக் கையிலெடுத்துள்ள இத்தீய சக்திகளுக்கு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலையும் ஒரு தைரியத்தைக் கொடுத்துள்ளது.

வில்பத்து, மீள்குடியேற்றம், வீடமைப்பு முதல், வியாபாரம் வரை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் களம் இச்சக்திகளால் சூடாக்கப்பட்டே வருகிறது. இதன் ஒவ்வொரு கட்டங்களையும் அமைச்சர் எதிர்கொள்ளும் திராணி ஆண்டவன் அமைச்சருக்கு வழங்கிய அருளாகவே கருத வேண்டியுள்ளது . எதிலும் பின்வாங்காது,எதற்கும் சளைக்காது தடைகளைக் கடக்கும் அமைச்சருக்கு இமயமலையே இன்று முன்னால் வந்து முட்டுக் கட்டையாக நிற்கிறது.

பத்து விடயங்களை முன்வைத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் முஸ்லிம்களிடத்தில் பெரும் பிரளயமாகவே ஊற்றெடுத்துள்ளது. இவற்றைக் கொண்டுவந்தவர்களின் பின்னணிகள்,மன நிலைகளாலே இப்பிரளயம் பீறிட்டுப்பாய்கின்றது. வில்பத்துவில் பயிற்சி முகாம்களாம்! மன்னாரில் அரபுக் கொலனியாம்! மீள்குடியேற்றத்தில் திட்மிட்ட காடழிப்புகளாம்! இவ்வாறு வந்த இவர்களின் நெடுங்கதைகள் இன்று பயங்கரவாதத்துடன் அமைச்சரை முடிச்சுப்போடும் முடிவுரைகளாக வந்து நிற்பதே முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனை. இத்தனைக்கும் தௌிவாகப் பதிலுரைத்த அமைச்சர், தன்மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை ஆராய, பாராளுமன்றத்தில் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிய பின்னரும் இந்த மலைப் பாம்புகளின் வாய்கள் மூடியதாகத் தெரியவில்லை. பாராளுமன்றத்தை விட இந்நாட்டில் ஓர் உயரிய சபை இல்லை. ஜனநாயகத்தின் உச்ச இருப்பிடமும் பிறப்பிடமும் அதுவேதான். வீதியால் வருவோர், போவோரின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாது, தன்னை விசாரிக்குமாறு, பாராளுமன்றத்தைக் கோருவதை விட ஒரு சமூகத் தலைவனுக்கு வேறு எந்தத் தெரிவும் இருக்க முடியாது. இந்தத் தெரிவுக் குழுவின் தீர்ப்பே போதும் எவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சமர்ப்பிக்கும் எந்த அவசியமும் தேவைப்படாது.

 பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தைக் கொச்சைப்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் குறுக்கு வழியால் கொய்ய முனைந்த கூட்டமே இன்று அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இவர்களின் 52 நாட்கள் ஆட்டத்துக்கு அமைச்சர் தாளம் போட்டிருந்தால் இவ்விமர்சனங்கள் புற்றுக்குள் படுக்கும் பாம்புகளாக ஓய்வெடுத்திருக்கும். சிறுபான்மைச் சமூகங்களை சீண்டியும் தீண்டியும் பழகிய இந்தக் கடும் கடும்போக்கு நாகங்களை அடையாளம் காணும் நல்லதொரு சந்தர்ப்பத்தை அவர்களாகவே ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

முஸ்லிம் தலைமைகளைப் பொறுத்த வரை இது ஒரு நிம்மதியே. எதிர்வரும் தேர்தல்களில் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் எப்படி அரவணைப்பது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அரசிலுள்ள தனித்துவ முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம்களின் மனநிலைகளுக்குள் ஊடுருவும் காலம் மலையேறி, தலைமைகளின் மனநிலைகளுக்குள் முஸ்லிம்கள் ஊடுருவி ஆராயும் புதிய நிலையே இன்று ஏற்பட்டுள்ளது. ஊடகங்களும் தொழில் நுட்பமும் மிதமிஞ்சிப் போயுள்ள இன்றைய நவீனத்தில் எதையும் எவருக்கும் சொல்ல வேண்டியதில்லை. இக்கடும் போக்கர்களின் பத்துக் குற்றச்சாட்டுக்களில் எவையுமே உண்மையில்லை. அடிப்படையற்ற,ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அமைச்சரை மல்லுக்கு அழைத்துள்ளனர்.

இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவுடன் தொடர்பு கொண்டு குண்டு வெடிப்பின் முக்கிய சகா ஒருவரை விடுவிக்குமாறு கோரினாராம்! முஸ்லிம் சமய விவாகரத் திணைக்களத்தில் உயர் பதவியில் உள்ள ஒருவர், அமைச்சருக்கு தெரிந்தவர். தெஹிவளையிலுள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த சீருடை தரிக்காத சிலர் அவரது மகனை வலுக் கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். “இன்ன குற்றத்திற்காக இன்னாராகிய நாங்கள் உமது மகனை விசாரணைக்காக அழைத்துச் செல்கிறோம்” எனத் தெரிவித்திருந்தால் அந்தத் தந்தைக்கு அப்பதற்றம் ஓரளவு குறைந்திருக்கும். இதை அறிய அச்சத்துடன் விழைந்த அத்தந்தை அமைச்சருடன் தொடர்பு கொண்டு தனது மகனை யார் அழைத்துச் சென்றது? எங்கிருக்கிறார்? இத்தகவல்களை மட்டுமாவது பெற்றுத்தருமாறு கோரினார். தனக்குத் தெரிந்த ஒருவர் இதைச் செய்யுமாறு கோருகிறார். கவலையடைந்த அந்த தந்தைக்கு ஆறுதல் பெற்றுக்கொடுக்க தொலைபேசியில் இராணுவத் தளபதியைத் தொடர்பு கொண்ட அமைச்சர் அதுபற்றி விசாரித்திருக்கிறார் .அவர் உள்ளாரா? எனக் கேட்பதற்கும் அவரை விடுதலை செய்யலாமா? என வினவுதற்கும், விடுதலை செய்யென உத்தரவிடுவதற்கும் வித்தியாசங்கள்.

கடும் போக்கர்களின் அடுத்த சீண்டலாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாந்தை மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கடைக்கு பின்புறமாக டைனமைற் இருந்த கதை அவிழ்க்கப்படுகின்றது. இத்தனைக்கும் அவர் கைதாகி பின்னர் விடுதலையாகியுள்ளார். இதையும் ஏதாவதொரு பயங்கரத்துடன் இணைப்பதற்கு அமைச்சருக்கு நெருக்குதல் கொடுப்பதற்கே குற்றச்சாட்டாகக் கொண்டு வந்துள்ளனர்.

அமைச்சரின் சகோதரர் ஒருவர் கைதாகி விடுதலையானதாகவும் அதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் இன்னுமொரு குற்றச்சாட்டு. தேடுதல் நடவடிக்கையின் போது அமைச்சரின் சகோதரரின் வீட்டையும் சோதனை செய்ததனால் கட்டிவிடப்பட்ட ஒரு சோடினைக்கதை இது .

இந்த விடயங்களில் கவனம் செலுத்தியுள்ள சகல முஸ்லிம்களும் துணிகரமான முஸ்லிம் குரலொன்றை ஒடிப்பதற்கு கடும்போக்காளர் கூட்டம் ஒன்றுபட்டுள்ளதாக எண்ணத் தொடங்கியுள்ளனர். நான் ஏற்கனவே கூறியதைப் போல் சமூகமொன்றின் மீதான வீண் உரசல்கள், தீண்டல்கள் ஆகக்குறைந்தது ஓர் அரசியல் தலைமையில் மக்களை விழிப்பூட்டும் என்பதைப் போல இன்று பேரினவாதத்தின் இந்த நெருடல்கள் அமைச்சர் ரிஷாதை தேசியத் தலைமைக்கான அளவுகோலாகக் கணிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.

இப்தாரை முடித்து விட்டு கொழும்பு ராஜகிரியவில் உள்ள ஒரு கடைக்குத் தேனீர் குடிக்கச்சென்ற பொழுது அங்கே சனக்கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.அங்கிருந்த சில இளைஞர்கள் சிலர்,உணர்ச்சி மேலீட்டால் பேசிய வார்த்தைகள் எனது காதுகளைக் குத்திக்கிழித்தன.இத்தனைக்கும் அவர்கள் அத்தனை பேரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்பதை அவர்களது பேச்சு மொழியில் புரிந்து கொண்டேன்.இம்முறை தேர்தலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவளித்தே ஆக வேண்டும் என்று திடசங்கற்பங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு பரவசப்பட்ட ஒலிகளே எனது காதுகளுக்குள் கணீரென்றன. இதிலொரு இளைஞர் தனது முதலாளியைப் பார்த்து தேர்தலுக்கு விடுமுறை தராவிட்டால் எனது தொழிலைத் தூக்கியெறிந்து விட்டு வாக்களிக்கச் செல்வேன் என்றார். இளைஞர்களின் இக்கிளர்ச்சிகள் வன்முறைகள் ஆகிவிடக் கூடாதென்பதற்காக மர்ஹூம் அஷ்ரஃப் ஓர் அரசியல் கட்சியை ஸ்தாபித்தமை எவ்வளவு யதார்த்தம் என்பதை அக்கணம் எனக்கு மேலும் படிப்பினையூட்டியது.அரசியலுக்காக இதை நான் எழுதவில்லை. நியாயமில்லாமல் சிறுபான்மை தலைமைகள் அல்லது சமூகத்தின் மீது நீட்டப்படும் விரல்கள் அந்தச் சமூகத்தின் அரசியல் தலைமையை அடையாளம் காண்பதற்கான தாகத்தையும், தேடல்களையும் இளைஞர்களிடையே ஏற்படுத்துவதை எவராலும் அணைபோட்டுத் தடுக்க முடியாது.இவ்வாறு எமது சகோதர சமூகத்தின் மீது கடந்தகாலங்களில் நீட்டப்பட் நாசகாரக் கரங்களின் தீண்டல்களால் தமிழ் ஈழத்துக்கான பாதையைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டமையும் எமக்கு முன்னாலுள்ள பாடங்களாகும். இந்தப் பாடங்களில் பல புரிதல்களைக் கற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மொழிச் சமூகங்களின் இடை வௌிகள் மிக விரைவில் இறுக்கி நெருக்கமாக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது.

இத்தனைக்கும் சிறுபான்மையினர் உரிமைக் குரலுக்கு முதல் முழக்கமிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ,அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான இப்பிரேரணையை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாது, அழுத்தங்களால் எம்மவரை அடிபணிய வைக்கும் கடும் போக்காளர்களின்   கச்சிதக்காய்நகர்த்தலாக இருக்குமோ என எண்ணுவதும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களின் அரசியல் தீட்சண்யத்தை தெட்டத்தெளிவாக்குகின்றது.

2 comments:

Powered by Blogger.