Header Ads



கண்மணி நாயகம் அவர்கள் தாயிபில் கேட்ட பிரார்த்தனையைப் போன்று, இப்பொழுது நாம் கேட்கிறோம்..

தாயிபுக்குச் சென்று நபிகளார் பட்ட துயரங்களில் கடுகளவையேனும் அவர்களது இலங்கை உம்மத் சுவைக்காவிட்டாலும் அவர்களது கவலையெல்லாம் அவர்களைப் பற்றியது அல்ல யா அல்லாஹ்!
எந்த மாதத்தில் நீ இந்த கலாமை இறக்கி வைத்தாயோ அதே மாதத்தில் எம் கண்முன்னே பற்றி எரிந்த உனது குர்ஆனைப் பற்றிய கவலை யா அல்லாஹ்!

உன்னை மட்டும் வணங்க எமது சிரசை பணிக்கும் உனது மாளிகை சின்னா பின்னமாக்கப்பட்டது பற்றிய கவலை யா அல்லாஹ்!

இந்த புனித மாதத்தில் உன்னை மாத்திரம் சுமந்திருக்கும் பல இலட்சம் இதயங்கள் உடைத்து சுக்குநூறாக்கப்பட்ட கவலை யா அல்லாஹ்!

நீ தான் ரப்பு உனது ஹபீப் தான் எங்களது தூதர் என்று ஏற்றுக் கொண்டதைத் தவிர அந்த அப்பாவி நான்கு குழந்தைகளும் அநாதைகளாக ஆக்கப்படும் அளவிற்கு என்ன தவறு செய்தார்கள் என்ற கவலை தான் யா அல்லாஹ்!

யா அல்லாஹ் உனது அடியார்கள் மீது கருணை காட்டுவாயாக! அவர்கள் இழந்தவற்றை விட மிக நல்லவற்றை அவர்களுக்கு வழங்குவாயாக! அவர்களது இதயங்களுக்கு என்றென்றும் ஆறுதலை வழங்குவாயாக!

பழிக்குப் பழி வாங்குபவர்கள் அல்ல நாம்.. நாம் மன்னிப்பவர்கள், விட்டுக் கொடுப்பவர்கள், பிறர் துன்பங்களை எமது துன்பமாக கருதுகிறவர்கள், ஏனெனில் நாம் கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனாகிய அல்லாஹ்வின் அடிமைகள், கருணைக் கடல் கண்மணி நாயகத்தை உயிராக மதித்துப் பின்பற்றுபவர்கள்.

கண்மணி நாயகம் அவர்கள் தாயிபில் கேட்ட பிரார்த்தனையைப் போன்று இப்பொழுது நாம் கேட்கிறோம் எமது பலவீனத்தையே உன்னிடம் முறையிடுகிறோம் எமது இலங்கை உறவுகளில் சிலர் உன்னை அறியாத அறிவிலிகளாக செய்த அநியாயங்களை வைத்து அவர்களை அழித்து விடாதே! அதற்காக அவர்கள் வருந்துகின்ற நிலையை ஏற்படுத்தி விடுவாயாக! எந்த கரங்கள் அநியாயம் செய்ததோ அதே கரங்களை நீதிக்கு உதவுகின்ற கரங்களாக மாற்றி விடுவாயாக!

அவர்களது சந்ததிகளாவது உன்னை அறிந்து கொள்ளலாம், உனது தூதைப் புரிந்து இந்த மண்ணில் நமது சந்ததிகளுடன் நேசமாக வாழக்கூடும், யா அல்லாஹ்!

எமக்கு தெரியும் நலவுகளை மட்டுமே நாம் உன்னிடம் கேட்கிறோம், எதில் நலவிருக்கிறது என்பதை நீ மட்டுமே அறிந்து வைத்திருக்கிறாய் யா அல்லாஹ்!
Mufaris Ibnu Thajudeen Rashadi.

4 comments:

Powered by Blogger.