98 வீதம் முஸ்லிம்கள் வாக்குடன் வந்த ஐ தே க அரசு, இவ்வாறு நடந்து கொள்வது கவலையானது
இஸ்லாமிய மதத்தை கற்றுக்கொடுக்கும் அரபுக்கல்லூரிகளை சரியாக நிர்வகிக்க முடியும் என்றிருந்தால் அவற்றை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதை நாம் எதிர்ப்பதற்கில்லை என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் கூறியதாவது, கடந்த ஈஸ்டர் தற்கொலை குண்டுகளுக்கும் அரபு மதுரசாக்களுக்கும் முடிச்சு போடுவது வடிகட்டிய முட்டாள்த்தனமாகும். ஏனென்றால் இத்தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரைத்தவிர ஏனையோர் அரபு மதுரசாக்கள் பக்கம் எட்டியும் பாராதவர்கள். அவர்களில் அனேகமானோர் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்றவர்கள். இந்தநாட்டில் சுமார் நூறு வருடங்களுக்கும் மேலாக அரபுக்கல்லூரிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் படித்த எவரும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக வரலாற்றில் பதியப்படவில்லை.
தற்கொலைதாரிகளில் ஒருவரான ஸஹ்ரான் என்பவர் தவ்ஹீத் சார்பு அரபு மதுரசாவில் கல்வி கற்றவரும் அல்ல. நூறு வீதம் தவ்ஹீதுக்கு மாற்றமான காத்தான்குடி பலாஹ் மதுரசாவிலேயே பல காலம் கல்வி கற்றுள்ளார். இவற்றை வைத்து பார்க்கும் போது அவரது தீவிரவாத சிந்தனைக்கும் அரபு மதுரசாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்கள், அரச ஒத்துழைப்புடன் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டமை போன்ற காரணங்கள் இவர்களை தீவிரவாதத்துள் தள்ளி விட்டிருக்கலாம்.
இதனை வைத்து பார்க்கும் போது முஸ்லிம் சமூகத்துக்கெதிரான தாக்குதல்களை, இனவாத கருத்துக்களை அரசுகள் தடுப்பதன் மூலம் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த முடியுமே தவிர இதற்கும் அரபு மதுரசாக்களுக்கும் முடிச்சுப்போடுவது நோய்க்கு சரியான தீர்வைத்தேடுவதிலிருந்து நம்மை திசைதிருப்புவதாகும்.
இந்த நாட்டில் அரபு மதுரசாக்கள் அனைத்தும் அரசாங்க திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டே உள்ளன. கடந்த மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் கூட இவ்வாறான முயற்சிகள் நடைபெறவில்லை.
மதுரசாக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பே அரசின் திட்டமாகும்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு சில மாதங்கள் முன்பு மதுரசாக்களை வக்பு சபையுடன் இணைக்க வேண்டும் என முஸ்லிம் சமய, கலாசார அமைச்சர் கூறியிருந்தார்.
தற்போது அத்தாக்குதலை சந்தர்ப்பமாக பாவித்து மதுரசாக்களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரும் திட்டம் உருவாகியுள்ளது.
ஏற்கனவே இந்த நாட்டில் கல்வியே ஊழலில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவு கூட செத்த பிணம் போல் உள்ளது. அரச பாடசாலைகளில் இஸ்லாம் சமய ஆசிரியர்களை நியமிக்கப்போவதாக இந்த அரசு கடந்த நான்கு வருடங்களாக போக்கு காட்டி வருகிறது.
இந்த நிலையில் அரபு மதுரசாக்களை பொறுப்பேற்று அவைகளுக்கான பௌதீக வளம், கல்வி நடவடிக்கைகளுக்கான வளத்தை வழங்கல் போன்றவற்றை கல்வி அமைச்சு முறையாக செய்யுமா என்பது சந்தேகமானதே. அவ்வாறு நடக்குமாயின் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதில் பிரச்சினை இல்லை.
எம்மை பொறுத்தவரை மதுரசாக்கள் அனைத்தையும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வந்து, அரச அணுசரனையின் கீழ் பொதுப்பரீட்சை நடத்தப்பட்டு அதன் பின் அரசாங்கத்தால் மௌலவி பட்டம் வழங்க வேண்டும் என சொல்லி வருகிறோம். ஆனாலும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் அரபு மதுரசாக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் 98 வீதம் முஸ்லிம்கள் வாக்குடன் வந்த இந்த ஐ தே க அரசு இவ்வாறு நடந்து கொள்வது கவலையானது.
முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப்பெற்று ஆட்சிக்கு வந்த அரசு முஸ்லிம்களுக்கு சலுகை உரிமைகளை வழங்கவேண்டுமென்ற சட்டம் எங்கே எந்தப் புத்தகத்தில் இருக்கின்றது.
ReplyDeleteசிறந்த கருத்து
ReplyDelete